ஜே.இ.இ., தேர்வு முடிவு: முதல் 10 இடங்களில் தமிழகம் இல்லை

10

கான்பூர் : ஜே.இ.இ.-, அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் டில்லி மண்டலத்தைச் சேர்ந்த ரஜித் குப்தா பொது தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.


நாடு முழுதும் உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.,க்களில் சேர பொது நுழைவுத் தேர்வான ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த மாதம் 18ம் தேதி நடந்த தேர்வை, 1.80 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதற்கான முடிவுகளை ஐ.ஐ.டி., கான்பூர் நேற்று வெளியிட்டது.



மொத்தம் 9,404 மாணவியர் உட்பட 54,378 பேர் இந்த தேர்வில் உயர் கல்விக்கு தகுதி பெற்று உள்ளனர்.



ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில் ஐ.ஐ.டி., டில்லி மண்டலத்தைச் சேர்ந்த ரஜித் குப்தா பொது தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். இவர், 360க்கு 332 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.



ஐ.ஐ.டி., கரக்பூர் மண்டலத்தைச் சேர்ந்த தேவ்தத்தா மாஜ்ஹி பெண்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவர், 360க்கு 312 மதிப்பெண்கள் பெற்று, பொது தரவரிசைப் பட்டியலில் 16ம் இடத்தை பிடித்துள்ளார்.



முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் இடம்பெறவில்லை.

மண்டல வாரியாக, ஐ.ஐ.டி., ஹைதராபாத் அதிக எண்ணிக்கையிலான தகுதி பெற்ற மாணவர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த மண்டலத்தில், 12,946 மாணவர்கள் தகுதி பெற்றனர். ஐ.ஐ.டி., டில்லி, 11,370 தகுதி பெற்ற மாணவர்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

Advertisement