தனியார் கட்டடங்களில் தீயணைப்பான்கள் அவசியம்: காலாவதி குறித்து அதிகாரிகள் ஆய்வு தேவை

விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சிவகாசி, சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் ஆகிய நகர் பகுதிகள், அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் தனியார் வணிக வளாகங்கள், மண்டபங்கள், கட்டடங்கள் செயல்படுகிறது. இது போன்ற புதிய கட்டுமானப்பணிகளும் பல இடங்களில் தொடர்ந்து நடக்கிறது.

இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக வரும் போது விபத்து எதுவும் நடந்தால் பத்திரமாக வெளியேறுவதற்கான பாதுகாப்பான பாதை வசதிகள், தளங்கள் அதிகமாக இருந்தால் தீயணைப்பு தடுப்பு கருவி பயன்பாட்டில் வைக்கப்பட்டு இருப்பதையும் பணி முடிந்த பின் அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம்.

மேலும் தீ விபத்து நடந்தால் பரவாமல் தடுப்பதற்காக தீயணைப்பான்களும் பயன்பாட்டில் வைக்கப்படும். தனியார் கட்டடங்களில் தீயணைப்பான்கள், தீ தடுப்புக் கருவி முழுமையாக செயல்பாட்டில் இருப்பதை அதிகாரிகள் ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் எஸ்.பி., அலுவலகத்தின் கூட்டரங்கிற்கு அருகே 9 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான தீயணைப்பான் பயன்பாட்டில் இருப்பது குறித்து செய்தி மே 25ல் தினமலர் நாளிதழில் வெளியானது.

மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், நிறுவனங்களில் தீத்தடுப்பு சாதனங்கள் முறையாக பயன்பாட்டில் இருப்பதையும், தீயணைப்பான்கள் காலாவதி தேதி முடிந்தும் மாற்றப்படாமல் இருப்பதையும் அதிகாரிகள் முறையாக ஆய்வுகள் செய்வதில்லை.

அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் அடிக்கடி நடக்கும் திருமண மண்டபங்களில் தீயணைப்பான்கள் காலாவதி தேதி முடிந்தும் பயன்பாட்டில் உள்ளது. இந்த மண்டபங்களிலேயே மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர். அரசு அதிகாரிகள் தங்களின் ஆய்வு பணியை முறையாக செய்யாததால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே தனியார் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள தீத்தடுப்பு சாதனங்கள், தீயணைப்பான்கள் முறையாக செயல்பாட்டில் இருப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement