திண்டுக்கல் அணி முதல் வெற்றி: ஷிவம் சிங் அரைசதம் விளாசல்

கோவை: ஷிவம் சிங் அரைசதம் விளாச, திண்டுக்கல் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

கோவையில் டி.என்.பி.எல்., 9வது சீசன் துவங்கியது. நவஇந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் கோவை, 'நடப்பு சாம்பியன்' திண்டுக்கல் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின் 'பவுலிங்' தேர்வு செய்தார்.
சச்சின் அரைசதம்: கோவை அணிக்கு விஷால் வைத்யா (6), சுரேஷ் லோகேஷ்வர் (15) சுமாரான துவக்கம் தந்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்த போது சித்தார்த் (25) 'ரன்-அவுட்' ஆனார். சந்திரசேகர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பாலசுப்ரமணியம் சச்சின், 36 பந்தில் அரைசதம் எட்டினார். அஷ்வின் 'சுழலில்' சச்சின் (51) சிக்கினார். கேப்டன் ஷாருக்கான், 14 பந்தில் 25 ரன் விளாசினார். கோவை அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது.


ஷிவம் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு கேப்டன் அஷ்வின் (15) நிலைக்கவில்லை. மற்றொரு துவக்க வீரர் ஷிவம் சிங், கோவிந்த் கணேஷ் வீசிய 10வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். விமல் குமார் (28) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய ஷிவம் சிங், 36 பந்தில் அரைசதம் எட்டினார். சித்தார்த் வீசிய 17வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஷிவம் சிங், கோவிந்த் பந்தை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.
திண்டுக்கல் அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 154 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷிவம் சிங் (82 ரன், 5 சிக்சர், 5 பவுண்டரி), பாபா இந்திரஜித் (13) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement