நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நூலிழையில் விபத்தில் இருந்து தப்பினார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
மாதேபுரா பகுதியில் இருந்து பாட்னாவுக்கு தேஜஸ்வி யாதவ் பாதுகாவலர்கள், அதிகாரிகளுடன் இன்று அதிகாலை 3 மணி அளவில் காரில் வந்து கொண்டிருந்தார். ஹாஜிபுர் பகுதியில் கோரல் என்ற இடத்தில் தேநீர் அருந்த அவர்கள் வந்த வாகனம் நிறுத்தப்பட்டது.
வாகனத்தை விட்டு இறங்கிய தேஜஸ்வி யாதவ், தேநீர் அருந்திக் கொண்டு இருந்தார். அப்போது எங்கிருந்தோ மின்னல் வேகத்தில் வந்த லாரி ஒன்று அவர்களின் வாகனம் மீது மோதி விபத்துள்ளானது.
இந்த விபத்தில் தேஜஸ்வி யாதவின் பாதுகாவலர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். மற்ற அனைவரும் நூலிழையில் உயிர் தப்பினர். அவர்கள் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: லாரி நான் நின்ற இடத்தில் இருந்து வெறும் 5 அடி தூரத்தில் தான் விபத்துக்குள்ளானது. கொஞ்சம் தவறி இருந்தாலும் எங்கள் அனைவர் மீது லாரி மோதி இருக்கும். விபத்தை ஏற்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இந்த விபத்து குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து அதிகாலை 3 மணிக்கு நடந்துள்ளது. இரவு நீண்ட நேரம் கண்விழித்து வாகனம் ஓட்டுவது டிரைவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே இரவு, அதிகாலை பயணத்தை தவிர்ப்பது நல்லது.
