சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நெருக்கடியை அரசால் மட்டும் தீர்க்க முடியாது: ஸ்டாலின்

சென்னை:''வனக்காவலர்கள் தான் காடுகளின் முதுகெலும்பாக உள்ளனர். இவர்கள் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஹீரோக்கள்,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில், உலக சுற்றுச்சூழல் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் துவக்கி வைத்தார். தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மைய கட்டடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான 14 கடலோர மாவட்டங்களில், கடலில் கைவிடப்பட்ட மீன்பிடி வலைகளை சேகரிக்கும் திட்டத்தையும், நாட்டிலேயே முதல்முறையாக தனுஷ்கோடியில், பெரிய பூநாரைகளுக்கான சரணாலயத்தையும் துவக்கி வைத்தார்.
வனத்துறைக்கு, 2022 முதல் தேர்வு செய்யப்பட்ட 1,411 பேரில், 1,304 வனக்காவலர்கள் உள்ளிட்டோருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
காடுகளை பாதுகாப்பதற்கான மனிதவளத்தின் அவசர தேவையை உணர்ந்து, நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்த காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனக்காவலர்கள் தான் காடுகளின் முதுகெலும்பு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வனக்காவலர்கள் தான் ஹீரோக்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வேறு எந்த மாநிலத்திலும், இத்தனை இயக்கங்கள், திட்டங்கள் இல்லை என்று அடித்து சொல்லும் அளவுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி இருக்கிறோம்.
'தமிழக கிளைமெட் கம்பெனி' என்ற நிறுவனத்தை துவக்கி, அதன் வாயிலாக ஈர நிலங்கள் பாதுகாப்பு, பசுமை இயக்கம், காலநிலை மாற்ற திட்டம், தமிழக நெய்தல் மீட்சி திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி வருகிறோம். இந்த வரிசையில், மன்னார் வளைகுடாவில், 'கிரேட்டர் பிளமிங்கோ' எனப்படும் பெரிய பூநாரைகள் சரணாலயம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம். யானைகள், புலிகள் மட்டுமல்லாது, மக்கள் அதிகம் அறிந்திடாத விலங்குகளை பாதுகாக்க, அருகி வரும் உயிரினங்கள் நிதியம் வாயிலாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை, அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்களால் மட்டும் தீர்த்துவிட முடியாது. ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு, தொழில் துறை வளர்ச்சியின் மையமாக இருக்க வேண்டும்.
சுற்றுச்சூழலை காக்கிற செயல்பாடுகள், பொருளாதார வளர்ச்சி இலக்குடன் இணைந்து செயல்பட வேண்டும். நம் கனவு, 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மட்டும் கிடையாது; அது ஒரு பசுமை பொருளாதாரமாக இருக்க வேண்டும்.
கடந்த 2021ல் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கினோம். இது, அரசின் திட்டமாக இருந்தால் போதாது; மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அரசாங்கத்தால் திட்டங்களை கொண்டுவரத்தான் முடியும். அதன் வெற்றி, மக்கள் தங்களின் அன்றாட பழக்கங்களை மாற்றிக் கொள்வதில் தான் இருக்கிறது.
உலக சுற்றுச்சூழல் நாளின் இந்த ஆண்டுக்கான கருத்து, நெகிழி மாசுபாட்டை ஒழிப்போம் என்பது தான். எனவே, வெளியில் புறப்படும் போது, மொபைல் போனை 'சார்ஜ்' செய்து செல்வது போன்று, மறக்காமல் துணிப்பை, தண்ணீர் பாட்டில் எடுத்து செல்ல வேண்டும்.
கடல் மாசுபாட்டை தடுக்க, 14 மாவட்டங்களில் கடலில் கைவிடப்படும் வலைகளை சேகரிக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்துடன், 'துாய்மை மிஷன்' என்ற பெயரில், 'இது குப்பை மேட்டர் இல்லை' என்ற பிரசார இயக்கம், சமூக வலைதளம் வாயிலாக துவங்கப்பட்டுள்ளது.
இந்த அரசு, சமூக நீதிக்கானது மட்டுமல்ல; சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும். அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், வனம், சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு, வனத்துறை தலைவர் ஸ்ரீநிவாஸ் ஆர்.ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மேலும்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை