அயோத்தியில் கோலாகலமாக நடந்தது ராம தர்பார் பிராண பிரதிஷ்டை

அயோத்தி: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், அவரது அரசவையான ராம தர்பார் விக்ரகம் உட்பட எட்டு விக்ரகங்களுக்கு நேற்று பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ஸ்ரீ ராமஜென்மபூமி புண்ணிய ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது.
கும்பாபிஷேகம்
இதன் முதற்கட்ட பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு ஜனவரியில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த விழாவில் குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதையடுத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் குழந்தை ராமரை தரிசித்து வருகின்றனர்.
அதேசமயம், எஞ்சிய கட்டுமானப் பணிகள் கோவிலில் முழுவீச்சில் நடந்து வந்தன.
கோவில் சுவர்களில் இடம்பெறக்கூடிய ராமாயண கதைகளுக்கான சுவரோவியம் தவிர இதர பணிகள் அனைத்தும் சமீபத்தில் முடிவடைந்தன. இதையடுத்து, கோவில் வளாகத்தில் இடம்பெற்றுள்ள எட்டு கோவில்களின் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.
இதற்கான யாகசாலை பூஜைகள் மற்றும் சடங்குகள் கடந்த 3ம் தேதி துவங்கின.
ராமர் பிறந்த, 'அபிஜித் முகூர்த்தம்' எனப்படும் நெருக்கடி மற்றும் தடைகளை அகற்றும் நேரமான காலை 6:30 மணிக்கு, எட்டு கோவில்களின் விக்ரகங்களுக்கு ஒரே நேரத்தில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கோவிலின் முதல் தளத்தில், வேத மந்திரங்கள் முழங்க ராம ராஜ்ஜியத்தை பிரதிபலிக்கும் ராம தர்பாருக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ராமருடன் சீதாதேவி சிம்மாசனத்தில் எழுந்து அருளியுள்ள நிலையில், லட்சுமணன், பரதன் மற்றும் ஹனுமன் ஆகியோர் ஒன்றாக உள்ள சிலை இடம்பெற்றுள்ளது.
ராமரின் அவதாரமான சேஷ அவதாரம், சிவன், விநாயகர், ஹனுமன், சூரிய கடவுள், பகவதி தேவி மற்றும் அன்னபூர்ணா தேவி விக்ரகங்கள் கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
அனுமதி இல்லை
நிகழ்ச்சியில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத், வேத குருக்கள், ஆன்மிக தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரபலங்களுக்கு அனுமதி இல்லை என கோவில் அறக்கட்டளை சார்பில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிராண பிரதிஷ்டை விழாவைத் தொடர்ந்து ஆரத்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
இந்த விழாவில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலில் குவிந்தனர்.
புதிதாக பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை, ஒரு வாரத்துக்கு பின் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்' என, கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
மேலும்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை