மருத்துவ கல்வி திட்டத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லுாரி வளாகத்தில் உள்ள, மிராக்கிள் ஒருங்கிணைந்த சுகாதார மையத்தில், 'புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க ஒருங்கிணைந்த புற்றுநோயியல்' என்ற தலைப்பில் மருத்துவ கல்வி திட்டம் நிகழ்ச்சி நடந்தது.

மிராக்கிள் தலைமை மருத்துவ அதிகாரி பிரதீப் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை சக்தி குழும தலைவர் மாணிக்கம் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், டாக்டர் பிரதீப் 'ஒருங்கிணைந்த புற்றுநோயியல் அடித்தளங்கள்', டாக்டர் விஜாநேமா, 'குடல் நுண்ணுயிரி மற்றும் புற்றுநோய் இணைப்பு', டாக்டர் செந்தில்குமார் 'புற்றுநோய் கண்காணிப்பில் கதிரியக்கவியல்', டாக்டர் சரண்யன், 'மூலிகை மருத்துவம்', டாக்டர் ஜினாஷா 'ஓசோன் சிகிச்சை', டாக்டர் சுதர்ஷன் 'புற்றுநோய் ஊட்டச்சத்து' டாக்டர் சிவராஞ்சனி, 'நியூட்ராசூட்டிகல்ஸின் முக்கியத்துவம்' குறித்து பேசினர்.

இதில், என்.ஐ.ஏ., செயலாளர் ராமசாமி, இணை செயலாளர் சுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ அதிகாரி சுதர்சன், மேலாளர் ரமேஷ், என்.ஐ.ஏ., நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரி நாகராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியை முன்னிட்டு கல்லுாரி வளாகத்தில், மருத்துவ கண்காட்சியும் இடம்பெற்றது. பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் பலரும் பார்வையிட்டனர்.

Advertisement