மழை பொழிவு குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து சரிவு

வால்பாறை,; வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்ததால், நீர்வரத்து குறைந்து, அணைகள் நிரம்புவது தாமதமாகிறது.

வால்பாறையில் கடந்த மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கியது.கடந்த வாரம் மழை தீவிரமடைந்த நிலையில், இடைவிடாமல் பெய்த கனமழையினால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக மழைப்பொழிவு படிப்படியாக குறைந்து வருவதால், வால்பாறையில் திரண்டுள்ள சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், மழை பொழிவு அளவு குறைந்து, நீர்வரத்து சரிந்ததால், அணைகள் நிரம்புவது தாமதமாகிறது.

மொத்தம், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை 101.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 829 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது.

அணையிலிருந்து வினாடிக்கு, 885 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது.

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:

சோலையாறு - 17, வால்பாறை -13, மேல்நீராறு - 18, கீழ்நீராறு - 19, காடம்பாறை - 4 என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement