சேதமடைந்த கட்டடத்தில் இயங்கும் வாலாஜாபாத் நுாலகத்தால் வாசகர்கள் அவதி

வாலாஜாபாத் :வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள கிளை நுாலகத்தில், வாலாஜாபாத் மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த 4,900 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மாசிலாமணி முதலியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், வாலாஜாபாத் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர், தனியார் பள்ளி மற்றும் தொழிற்கல்வி மாணவ - மாணவியரும் நுாலகத்தில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

மாணவ - மாணவியர் இந்த நுாலகத்திற்கு வந்து செய்தித்தாள்கள் மற்றும் அரசு தேர்வு பாடநுால்கள், பொது அறிவு புத்தகங்கள் படித்து செலகின்றனர்.

வாலாஜாபாத் - ஒரகடம் சாலையில், ரயில்வே மேம்பாலம் அருகே கடந்த ஆண்டுகளில் நுாலகம் இயங்கியது. நுாலகத்திற்கான அக்கட்டடம் மிகவும் பழுதானதையடுத்து, அருகாமையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான ஒரு கட்டடத்தில் தற்போது செயல்படுகிறது.

இந்த கட்டடமும் சிதிலம் அடைந்து, போதுமான இடவசதியும் இல்லாமல் நெருக்கடியில் இயங்குகிறது.

இதனால், ஆபத்தான இக்கட்டடத்திற்கு மாறாக புதிய கட்டட வசதி ஏற்படுத்த பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி, வாலாஜாபாத் கிளை நுாலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட 2023 - 24ம் ஆண்டு, மத்திய - மாநில அரசுக்கான சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் 1.23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

எனினும், அதற்க்கான அடுத்தக் கட்டப் பணிகள் துவங்காமல் இதுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வாலாஜாபாத் கிளை நுாலக ஊழியர் ஒருவர் கூறியதாவது:

வாலாஜாபாத் கிளை நுாலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து, இடம் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இறுதியாக பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில், அரசு சித்த மருத்துவமனை அருகே புதிய கட்டடத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதி கடிதமும் பெற்று வருவாய் துறையினரிடத்தில் வழங்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னரே டெண்டர் விடப்பட்டு விரைவில் பணி நடக்க உள்ளதாக நுாலக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதுகுறித்து மீண்டும் மனு அளித்துள்ளோம்.

இந்த மாத இறுதியில் நுாலகத்திற்கு புதிய கட்டடப் பணி துவங்கப்படும் என, எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement