உணவு, நீரின்றி நாய்கள் பலி தொண்டு நிறுவனம் மீது வழக்கு

திருநெல்வேலி:திருநெல்வேலியில் கருத்தடைக்கு கொண்டு செல்லப்பட்ட இரு நாய்கள் பராமரிப்பின்றி இறந்தது தொடர்பாக, ஜீவகாருண்யா தொண்டு நிறுவனத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்து, மூன்று நாட்கள் உணவளித்து பாதுகாத்து மீண்டும் அதே பகுதியில் விடுவதற்காக, மாநகராட்சியுடன் நாகர்கோவில் தோவாளையை சேர்ந்த ஜீவகாருண்யா என்ற தொண்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்காக ஒரு நாய்க்கு 1,600 ரூபாய் கட்டணம் வழங்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன் 20க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்துச் சென்ற அமைப்பினர், மேலப்பாளையம் அருகே தகர கொட்டகையில் அடைத்திருந்தனர். போதிய உணவு, நீரின்றி இரண்டு ஆண் நாய்கள் இறந்துவிட்டன.

விலங்குகள் நல ஆர்வலர் மகாராஜன் புகாரில், தொண்டு நிறுவனத்தின் மீது மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement