'தேர்தல் நெருங்குவதால் ஓய்வின்றி உழைக்க வேண்டும்' என்.ஆர். காங்., இளைஞரணி தலைவர் பேச்சு

புதுச்சேரி; 'சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், இளைஞர் அணி நிர்வாகிகள் ஓய்வின்றி உழைக்க வேண்டும்' என, என்.ஆர். காங்., இளைஞரணி தலைவர் ரமேஷ் எம்.எல்.ஏ., கூறினார்.

புதுச்சேரியில் ஆளுங்கட்சியாக உள்ள என்.ஆர்.காங்., கட்சியின் பல்வேறு அணிகளுக்கு, பல ஆண்டுகளுக்கு பின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி, இளைஞரணி மாநில தலைவராக ரமேஷ் எம்.எல்.ஏ.,வை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி நியமித்தார்.

தொடர்ந்து, இளைஞரணிக்கு மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான நிர்வாகிகளை, ரமேஷ் எம்.எல்.ஏ., நியமனம் செய்தார். புதியதாக நியமிக்கப்பட்ட என்.ஆர்., காங்., இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு,இளைஞர் அணி தலைவர் ரமேஷ் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ரமேஷ் பேசும்போது, 'என்.ஆர். காங்., கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் அனைத்து தொகுதிகளிலும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஈடுபட வேண்டும். சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், இளைஞர் அணி நிர்வாகிகள் ஓய்வின்றி உழைக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் மக்களை சந்தித்து,முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு செய்துள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், ஆட்சியின் சாதனைகள் குறித்தும் தெருமுனைப் பிரசாரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement