தர்பூசணி லாரியில் 348 கிலோ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

புதுடில்லி:வடகிழக்கு டில்லி சோனியா விஹாரில், தர்பூசணிகள் ஏற்றப்பட்ட லாரியில், 1.75 கோடி மதிப்புள்ள கஞ்சா மறைத்து வைத்துக் கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, 348 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் குற்றப் பிரிவு துணைக் கமிஷனர் அபூர்வா குப்தா கூறியதாவது:

ஆந்திர மாநிலத்தில் இருந்து சோனியா விஹார் புஸ்தா சாலை வழியாக செல்லும் தர்பூசணி லாரியில், போதைப்பொருட்கள் கடத்திச் செல்லப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

சோனிய விஹாரில் சிறப்புப் படை போலீசார் வாகன சோதனை நடத்தினர். வண்டி நிறைய தர்பூசணிகள் ஏற்றப்பட்ட லாரி தடுத்து நிறுத்தப்பட்டது. லாரியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பச்சை இலைகள் நிறைந்த 17 பிளாஸ்டிக் பைகள் தர்பூசணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தப் பைகளில், 348 கிலோ கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு 1.75 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. லாரி டிரைவர் ரிஸ்வான், 32, உடன் வந்த இன்டெசார் மாலிக்,31, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த, ஐந்து ஆண்டுகளாக இதேபோல ஆந்திராவின் ராஜமுந்திரியில் இருந்து மாலிக் கஞ்சா கடத்தி வருவதை ஒப்புக் கொண்டார். இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.

Advertisement