1000 ஆசிரியர்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் எப்போது: அன்புமணி கேள்வி

சென்னை: கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற 1000 ஆசிரியர்களுக்கு ஓய்வுகால பயன்கள் தமிழக அரசு எப்போது அளிக்கப்படும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

அன்புமணி அறிக்கை:

ஓய்வுபெற்ற ஓய்வுக்கால பயன்கள் இல்லை: தணிக்கைத் தடை என்ற பெயரில் ஆசிரியர்களின் உரிமைகளைப் பறிப்பதா?

தமிழக அரசின் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்களில் சுமார் 1000 ஆசிரியர்களுக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி. தணிக்கைத் தடை என்ற பெயரில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 8 வகையான ஊக்க ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய ஊக்க ஊதியத்தை வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியாற்றி ஓய்வு பெறும் போது கடைசி பணி நாளில் அவர்களுக்கு உரிய ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், 2024- 25ஆம் கல்வியாண்டில் ஓய்வுபெற்ற தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்களில் 1000 பேருக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. அவை அவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்பதும் தெரியவில்லை. 30 ஆண்டுகளுக்கு மேல் அரசு பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வுக்காலப் பயன்களை வழங்க வேண்டியது அரசின் முதல் கடமை: அதை வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

அதேபோல், நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பி.லிட்., பி.எட். பட்டப்படிப்புகளை படித்து முடித்ததற்காக வழங்கப்படும் ஊக்க ஊதியத்தை வழங்க தமிழக அரசு மறுக்கிறது. 2009-ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியாக பணியாற்றியதற்கான தேர்வுநிலை தர ஊதியம் பெறுதல் ஆகியவற்றை தணிக்கைத் தடையை காரணம் காட்டி தமிழக அரசுநிறுத்தி வைத்துள்ளது.

ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை நினைத்துக் கவலைப் படாத தமிழக ஆட்சியாளர்கள். அதன் மூலம் அரசின் செலவுகள் குறைவதை நினைத்து மகிழ்ச்சியடைகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுதலைக்கு பிந்தைய காலத்தில் அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களின் நலன்களுக்கு எதிராக மிக மோசமாக செயல்படும் அரசு என்றால், அது இப்போது ஆட்சி நடத்தும் ஸ்டாலின் தலைமையிலான அரசு தான். 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் வழங்கிய திமுக, அவற்றின் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை. இது அரசு ஊழியர்கள். ஆசிரியர்களுக்கு திமுக செய்யும் பெருந்துரோகம்.இந்த துரோகத்திற்கும், ஆசிரியர்களின் மன உளைச்சல் மற்றும் வேதனைகளுக்கும் அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். தணிக்கைத் துறையால் போடப்பட்டுள்ள தேவையற்ற தடைகள் அனைத்தையும் அகற்றி, ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் அரசு உடனே வழங்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement