லட்சக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள்... பாதுகாப்பில் பிரச்னை ஏற்படும்; முன்னரே எச்சரித்த பெங்களூரு போலீசார்

பெங்களூரு: '' பெங்களூரு அணிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் ஒரே இடத்தில் கூடும் போது பாதுகாப்பு வழங்குவதில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது, '' என போலீசார் முன்னரே எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூருவில் கிரிக்கெட் வீரர்களை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடினர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுவதற்கு முன்னர், அதற்கு எதிராக போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
இது தொடர்பாக, சட்டசபை பாதுகாப்பு துணை கமிஷனர் எம்.என்.கரிபசவண்ணா கவுடா, பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் தனிநபர் துறை செயலர் சத்தியவதி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளதாக தெரிகிறது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:
பெங்களூரு அணிக்கு நாடு முழுதும் ரசிகர்கள் உள்ளனர். விதான் சவுதா முன்பு லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கூட வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பு படையினர் பற்றாக்குறையால், கூட்டத்தை கட்டுப்படுத்துவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
கூட்டத்தை கட்டுப்படுத்த ஜூன் 4 வரை ஆன்லைன் வழியாகவும், ஆப்லைன் வழியாகவும் நுழைவு சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்.
கொண்டாட்டம் நடக்கும் நாள் அன்று, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலகத்திற்கு குடும்பத்தினரை அழைத்து வர தடை விதிக்க வேண்டும். அன்றைய தினம் அரைநாள் விடுப்பு வழங்குவது சிறந்தது.
பாரம்பரிய கட்டடம் என்பதால், விதான் சவுதாவில் கண்காணிப்பு உள்கட்டமைப்பு கிடையாது.
நிகழ்ச்சிக்கு என ஒரு மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அதனை பொதுப்பணித்துறையினர் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
நிகழ்ச்சி துவங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர், அந்த இடத்தில் ஏதேனும் சதி வேலை உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
கூட்டத்தை கண்காணிக்க ட்ரோன்கள் தேவை. பாதுகாப்புக்கு நகருக்கு வெளியே இருந்து கூடுதல் போலீசாரை வரவழைக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கை பராமரிக்க போக்குவரத்து போலீசாரின் ஒத்துழைப்பும் தேவை. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த எச்சரிக்கையையும் மீறி வெற்றி கொண்டாட்டம் நடந்ததில் 11 அப்பாவிகளின் உயிர் பரிதாபமாக பறிபோனது.



