கல்லுாரி சுவர் முழுக்க 'போஸ்டர்'; பார்வைக்கு அலங்கோலம்

பல்லடம்; பல்லடம் அரசு கல்லுாரி சுற்றுச் சுவரில் விதிமீறி போஸ்டர்கள் ஒட்டுவது வாடிக்கையாக உள்ளது.

பல்லடம்- - மங்கலம் ரோட்டில், அரசு பள்ளி மற்றும் கல்லுாரி ஆகியவை செயல்படுகின்றன. பொதுவாக, அரசு அலுவலக சுற்றுச்சுவர்களில், போஸ்டர்கள் ஒட்டுவதும், விளம்பரங்கள் செய்வதும் சட்டப்படி குற்றம்.

அத்துமீறி போஸ்டர்கள் ஒட்டுவது, சுவர் விளம்பரங்கள் செய்வதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்ற விதிமுறை உள்ளது.

ஆனால், அரசு அதிகாரிகள் இதை கண்டும் காணாமல் உள்ளனர். பல்வேறு இடங்களில், அரசு சுவர்களில் போஸ்டர் ஒட்டுவது மற்றும் விளம்பரங்கள் செய்வதுமான செயல்கள், எவ்வித தயக்கமுமின்றி நடந்து வருகின்றன.

மேலும், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கும் பல்லடம் அரசு கல்லுாரி சுற்றுச்சுவரில், சமீப நாட்களாக 'போஸ்டர்கள்' ஆக்கிரமித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன், அரசு கல்லுாரி சுவரில், அரசியல் கட்சி 'போஸ்டர்கள்' ஒட்டப்பட்டது குறித்து, சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, போஸ்டர்கள் கிழிக்கப்பட்ட நிலையில், தற்போது, மீண்டும் பல்வேறு தனியார் அமைப்பினரின் போஸ்டர்கள், சுற்றுச்சுவரை ஆக்கிரமித்து வருகின்றன.

இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்பதால், கல்லுாரி நிர்வாகம் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement