குப்பைக் கிடங்கில் மாட்டிறைச்சி கழிவு புதைப்பு?

போத்தனுார்; கோவை, போத்தனுார் -- செட்டிபாளையம் சாலையில் ஸ்ரீராம் நகர் அருகே மாநகராட்சி கழிவு நீர் பண்ணை வளாகம் உள்ளது.

இதன் ஒரு பகுதியில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகழிவு கொட்டப்படுகிறது. அத்துடன் கோழி இறைச்சி கழிவுகளும் கொட்டப்பட்டன. மக்களின் எதிர்ப்பால் அவை குழி தோண்டி புதைக்கப்பட்டன.

நேற்றிரவு 7:45 மணியளவில், மினி லாரி ஒன்று கடும் துர்நாற்றத்துடன் குப்பைகிடங்கு நோக்கி சென்றது. தகவலறிந்த குறிச்சி -- வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன், ஸ்ரீராம் நகர் பிரதான சாலை சந்திப்பு அருகே மினி லாரியை நிறுத்தினார். ஓட்டுநரிடம் விசாரித்த போது, மாட்டிறைச்சி கழிவை குப்பை கிடங்குக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். கழிவு முழுவதும் மூடப்பட்டிருந்ததால், புகைப்படம் எடுக்க முடியவில்லை.

வாகனத்தை மட்டும் புகைப்படம் எடுத்துள்ளனர். தொடர்ந்து, வாகனம் கிடங்குக்குள் சென்று விட்டது.

மோகன் கூறுகையில், ''இதுவரையிலும் கோழி இறைச்சி கழிவுதான் வருவதாக நினைத்திருந்தோம். தற்போது மாட்டிறைச்சி கழிவும் கொண்டு வருவது தெரியவந்துள்ளது. மாநகராட்சி கமிஷனர் உடனடியாக இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement