நகை வணிகர்களை அழைத்து சென்ற போலீசார்: சம்மேளன தலைவர் கண்டனம்

கோவை; கும்பகோணத்தில் இரண்டு நகை வணிகர்களை போலீசார் அழைத்து சென்றதுக்கு தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சம்மேளன தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சம்மேளன தலைவர் சபரிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நேற்று முன்தினம் மாலை கும்பகோணத்தை சேர்ந்த இரண்டு நகை வணிகர்களை போலீசார் திருட்டு நகை வழக்கில் அழைத்து சென்றனர். எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாமல், உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்காமல் சட்டத்தை மீறி திருடர்களை போல அழைத்து சென்றுள்ளனர். எங்கே அழைத்து சென்றனர் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. பின்னர், உயரதிகாரிகளிடம் விசாரித்ததில் அவர்கள் இருவரும் மேல்மருவத்துார் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

அவர்களை சந்திக்க சென்ற கும்பகோணம் சங்க உறுப்பினர்களை சந்திக்க அனுமதிக்கவில்லை. சட்டத்தை மீறிய போலீசாரின் இந்த செயலை தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு சபரிநாதன் தெரிவித்துள்ளார்.

Advertisement