போலி ரூபாய் நோட்டுகள்; தர்மபுரி வாலிபர் கைது

கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டியில் போலி ரூபாய் நோட்டுகள், செல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் கத்தை, கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய நான்கு பேரை தேடி வருகின்றனர்.

கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்த முத்துக்குமாரை தொடர்பு கொண்ட ஒரு கும்பல், 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால், 2 லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாக கூறியுள்ளனர். அதை நம்பி, சாரதாம்பாள் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு நேற்று சென்றார்.

அங்கிருந்த கும்பல் அவரிடம் பணத்தை கேட்டுள்ளனர். அதற்கு, தான் பணம் கொண்டு வரவில்லை, என, முத்துக்குமார் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், முத்துக்குமாரை தகாத வார்த்தைகளில் பேசி தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய அவர், கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் சென்றனர். போலீசாரை கண்டதும் அக்கும்பல் தப்பி ஓடியது. அதில், ஒரு நபர் பிடிபட்டார்.

விசாரணையில், தருமபுரியை சேர்ந்த இளவரசன், 36, என்பதும், ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து, போலியான ரூபாய் நோட்டுகளை தயாரித்தது தெரிந்தது. வீட்டில் சோதனையிட்ட போது, கத்தை, கத்தையாக போலி நோட்டுகள் மற்றும் பழைய செல்லாத, 500 மற்றும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஸ்கேனர் மெஷின், சூட்கேஸ்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இளவரசனை கைது செய்தனர். தப்பியோடிய நான்கு பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement