காவிரி ஆரத்திக்கு ரூ.100 கோடி தேவையா? மத்திய அமைச்சர் குமாரசாமி கேள்வி

மாண்டியா : “காவிரி ஆரத்திக்கு 100 கோடி ரூபாய் அவசியமா? இவ்வளவு செலவிடுவதை நான் எதிர்க்கிறேன்,” என, மத்திய கனரக தொழிற் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

காவிரி ஆரத்திக்கு 100 கோடி ரூபாய் செலவிட, அரசு முற்பட்டுள்ளது. இவ்வளவு பணம் தேவையா? முன்னாள் அமைச்சர் புட்டராஜு, கெரதண்ணுாரில் காவிரி ஆரத்தி நடத்தினார். அவர் இவ்வளவு தொகையை செலவிடவில்லை. இப்போது 100 கோடி ரூபாய் செலவிடுவது ஏன்? தேவையின்றி இவ்வளவு ரூபாய் செலவிடுவதை, நான் எதிர்க்கிறேன்.

நடப்பாண்டு நாடு முழுவதும், 14,000 மின்சார பஸ்கள் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூருக்கு 4,500 மின்சார பஸ்கள் கிடைக்கும். கர்நாடகாவுக்கு அதிகமான பஸ்கள் வழங்கும்.

மாண்டியா மாவட்டத்துக்கு தொழிற்சாலை கொண்டு வர முயற்சிப்பேன். இதற்காக மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement