கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தவர் கொலையில் 3 பேர் கைது

சிக்கமகளூரு : கள்ளக்காதலியின் கணவரை கொன்ற கள்ளக்காதலன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

சிக்கமகளூரு மாவட்டம், கடூர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியா, 60. மே 31ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. மனைவியும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக கடூர் போலீசில், அவரது மனைவி புகார் அளித்தார்.

இதற்கிடையில், கடூரின் கன்சகர் கேட் அருகில், மே 31ம் தேதி, பாதி எரிந்த நிலையில் உடல் காணப்பட்டது. இதையும் கடூர் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், கொலையானது, காணாமல் போனதாக கூறப்பட்ட சுப்பிரமணியா என்பது தெரிய வந்தது.

விசாரணையில், சுப்பிரமணியாவின் 55 வயது மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த கார்பென்டர் பிரதீப்புக்கும், 35, ஐந்து ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. எட்டு மாதங்களுக்கு முன்பு இவ்விஷயத்தை சுப்பிரமணியா தெரிந்து கொண்டார்.

அதிர்ச்சி அடைந்த அவர், மனைவிக்கு புத்திமதி கூறியுள்ளார். இதனால் பிரதீப்பை சந்திப்பதையும், மொபைல் போனில் தொடர்பு கொள்வதையும் அவர் நிறுத்தினார்.

கோபமடைந்த பிரதீப், தன்னுடன் பணியாற்றும் சித்தேஷ், 35, விஸ்வாஸ், 18, ஆகியோருடன் சேர்ந்து சுப்பிரமணியாவை கொலை செய்துள்ளனர். உடல் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளனர். கொலையில் சுப்பிரமண்யா மனைவிக்கு தொடர்பு இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement