சத்யவதி என்ன தவறு செய்தார்? முதல்வர் சித்தராமையா 'வக்காலத்து'

மைசூரு : “விதான் சவுதாவில் ஆர்.சி.பி., வெற்றிக் கொண்டாட்டம் நடந்த விஷயத்தில், நிர்வாக சீர்திருத்த துறை செயலர் சத்யவதி என்ன தவறு செய்தார்; அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்?” என, முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சின்னசாமி மைதானம் முன், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தது, அரசுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசை கண்டித்து பா.ஜ., போராட்டம் நடத்துகிறது. என் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்கின்றனர். நான் என்ன தவறு செய்தேன்? இந்த விஷயத்தில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன.
போலீசை நான் மிரட்டியதாக, மத்திய அமைச்சர் குமாரசாமி சொல்வது 100க்கு 100 சதவீதம் பொய். போலீஸ் துறையை விமர்சித்து வந்த, எதிர்க்கட்சிகளுக்கு தற்போது போலீஸ் துறை மீது திடீர் காதல் வந்துள்ளது.
மேலோட்டமாக பார்த்தபோது, யார் தவறு செய்தார்களோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன். எதிர்க்கட்சியினர் கேட்டனர், ஓய்வு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில், நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். இதற்கு மேல் நான் என்ன செய்ய வேண்டும்?
விதான் சவுதா டி.சி.பி., கரிபசன கவுடா, நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் சத்யவதிக்கு எழுதிய கடிதத்தில், அரசு எடுக்கும் முடிவை பின்பற்ற தயாராக இருப்பதாக கூறி உள்ளார். அந்த கடிதம், என் பார்வைக்கு வரவில்லை. தலைமை செயலர் ஷாலினி, என்னை சந்தித்து பேசும்போது, 'விதான் சவுதா முன் நிகழ்ச்சி நடத்த போலீஸ் துறை ஒத்துழைப்பு கொடுத்துள்ளது' என்றார்.
இதனால் நிகழ்ச்சி நடத்த நான் அனுமதி கொடுத்தேன். விதான் சவுதாவில் நடந்த நிகழ்ச்சியில் ஏதாவது பிரச்னை நடந்ததா? அப்படி இருக்கும்போது சத்யவதி என்ன தவறு செய்தார்; அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்?
விதான் சவுதாவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது, கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன். நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி எனக்கு அழைப்பு விடுத்தனர். கவர்னரும் வருவதாக கூறினர். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
மைதானத்தில் நடந்த விழாவிற்கு வரும்படி, என்னை யாரும் அழைக்கவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கி முதல் உயிரிழப்பு மாலை 3:50 மணிக்கு பதிவாகி உள்ளது. ஆனால் எனக்கு மாலை 5:45 மணிக்கு தான் தகவல் கிடைத்தது. என்னிடம் தகவல் சொல்ல வேண்டிய பொறுப்பு, பெங்களூரு கமிஷனருக்கு இருந்தது. அவர் ஏன் சரியாக நேரத்தில் சொல்லவில்லை? பணியில் அலட்சியமாக இருந்ததால், கமிஷனராக இருந்த தயானந்தாவை, சஸ்பெண்ட் செய்தேன்.
அவரை மீது மட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை, கூடுதல் டி.ஜி.பி., - டி.சி.பி., - ஏ.சி.பி., - இன்ஸ்பெக்டர் ஆகிய 5 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன். உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.,யும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
என் அரசியல் செயலராக இருந்த கோவிந்தராஜை நீக்கி உள்ளேன். இந்த விஷயத்தில் அரசு தீவிரமாக உள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி.
இந்த சம்பவத்தால் அரசுக்கு எந்த அவப்பெயரும் ஏற்படவில்லை. மேலிடம் எந்த அறிக்கையும் கேட்கவில்லை. இந்த சம்பவம் நடந்திருக்க கூடாது. இனிமேலும் நடக்கக் கூடாது. திறந்த பஸ்சில் வீரர்கள் ஊர்வலமாக செல்ல, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அனுமதி வழங்கவில்லை. இதனால் அவரை பா.ஜ., விமர்சித்தது. இப்போது அப்படியே மாற்றிப் பேசுகின்றனர்.
கும்பமேளா நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தற்கு பொறுப்பு ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்தாரா?
இவ்வாறு அவர் கூறினார்.
சின்னசாமி கிரிக்கெட் மைதானம் நகரின் மையபகுதியில் உள்ளது. இந்த மைதானத்தை சுற்றி கப்பன் பார்க், உயர்நீதிமன்றம், விதான் சவுதா, எம்.ஜி.ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளன. மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கும்போது, மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.“இந்த கோரிக்கையை பரிசீலிப்போம்,” என, முதல்வர் சித்தராமையா நேற்று கூறினார்.
சின்னசாமி மைதானத்தில் 4ம் தேதி ஆர்.சி.பி., அணியின் வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது. இதுதொடர்பான வீடியோ நேற்று வெளியாகி இருந்தது. அந்த வீடியோ மூலம் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தது தெரிந்தது.ரசிகர்களை மைதானத்திற்குள் கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன், ஆர்.சி.பி., நிர்வாகம் அனுமதித்திருந்தால், அந்த இருக்கைகள் நிரம்பி இருக்கும். மைதானம் முன் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நடந்து இருக்காது என, மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும்
-
தேனிலவுக்கு சென்ற இடத்தில் புது மாப்பிள்ளை கொலை: புது மணப்பெண் உட்பட 4 பேர் கைது
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 சரிவு; ஒரு சவரன் ரூ.71,640!
-
காசாவுக்கு சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது
-
பாகிஸ்தான் கழுதைக்கு 'டிமாண்ட்' ரூ.2 லட்சமாக விலை உயர்வு
-
அதிகாலை பயணத்தால் தொடரும் விபரீதம்; நெடுஞ்சாலையில் கார்- வேன் மோதி 12 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!