'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம்  தனி புத்தகமாக வெளியிடணும்'

கோவை; தமிழக பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாடங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ள நிலையில், இவை தனிச்சிறப்பு வாய்ந்த பாடமாக இருக்க வேண்டுமென, கணினி ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

உலகளவில் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி, முக்கிய இடம் பிடித்துள்ளது. தொழில், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில், ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ளதால், மாணவர்கள் பள்ளி நிலையிலேயே, ஏஐ தொழில்நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதை கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வித் துறை, அரசு பள்ளிகளில், தமிழ்நாடு பள்ளிப்பாடத்திட்டத்தின் கீழ் கணினி அறிவியலுடன், ஏஐ பாடங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கு குழு அமைக்கப்பட்டு, அடுத்த கல்வியாண்டிலிருந்து திட்டம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் கலைவாணன் கூறியதாவது:

6ம் வகுப்பு முதல் கணினி அறிவியலை தனி பாடமாக கொண்டு வர, சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அது கைவிடப்பட்டது. தற்போது, அறிவியல் பாடத்தில் கடைசி பகுதியாகவே, கணினி அறிவியல் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், 6முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கணினி அறிவியல் அடிப்படைகளைக் கற்றுக் கொடுப்பதே சவாலாக உள்ளது.

இதே போல், ஏஐ பாடத்தையும் அறிவியல் பாடத்தில் ஒரு பகுதியாக இணைத்துவிட்டால் எந்த பயனும் இருக்காது. அதற்கு பதிலாக, ஏஐ படிப்பு தனி பாடமாகவும், தனி பாடப்புத்தகத்துடன் வெளியிடப்பட வேண்டும். அதற்காக தனி வகுப்புகள் ஒதுக்கி, தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அப்போது தான் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் புரிதல் கிடைக்கும். செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடங்கள், மேல்நிலை வகுப்பிலும் சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement