விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்

திருப்பூர்; 'பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின் படி, ஒப்பந்தம் செய்த கூலி உயர்வு வழங்கப்படவில்லை' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விசைத்தறியாளர் சங்க கூட்டுக்கமிட்டி கூட்டம், சோமனுாரில் நடந்தது. அவிநாசி, புதுப்பாளையம், கண்ணம்பாளையம், தெக்கலுார், பெருமாநல்லுார் உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர் சங்க தலைவர் பூபதி கூறியதாவது:

கூலி உயர்வு பிரச்னை தொடர்பான போராட்டம், துறை அதிகாரிகள், கலெக்டர், அமைச்சர் உள்ளிட்டோர் நடத்திய பேச்சு அடிப்படையில் ஒத்தி வைக்கப்பட்டது. சோமனுார் ரகத்துக்கு 15 சதவீதம், பிற பகுதி ரகங்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்படும்; கடந்த, ஏப்., 20ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.சொன்னபடி இதுவரை அந்த கூலி உயர்வு வழங்கப்படவில்லை.

இதைக்கண்டித்தும், உரிய கூலி உயர்வு வழங்க வலியுறுத்தியும் வரும், 16ம் தேதி முதல், 18ம் தேதி வரை மூன்று நாட்கள், அவிநாசியில், தொடர் உண்ணாவிரதம் நடத்தப்படும். அதன் பிறகும் முடிவு ஏற்படாவிட்டால், 18ம் தேதி கூட்டுக்கமிட்டி கூட்டம் நடத்தி, அடுத்தக்கட்ட ஆலோசனை மேற்கொள்ளப்படும். அடுத்தடுத்த தொடர் போராட்டங்களில் விசைத்தறியாளர்கள் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement