மலை அடிவார கிராமங்களில் சாராயம் விற்பனை படுஜோர்

கல்வராயன்மலை மற்றும் மலை அடிவார பகுதியில் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனை படுஜோராக நடக்கிறது.

கல்வராயன்மலையில், கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மலையில் இருந்து இருசக்கர வாகனங்கள் மூலம் கீழே கடத்தி வந்து பல்வேறு கிராமங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 69 பேர் பலியாகினர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதையடுத்து கல்வராயன்மலை பகுதியில் போலீசார் தொடர் சாராய சோதனை மேற்கொண்டு பலரை கைது செய்தனர். போலீசாரின் தொடர் நடவடிக்கையால் கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனை செய்வது முற்றிலும் குறைந்தது.

மேலும் கள்ளச்சாராயம் கடத்துவதை தடுக்கும் பொருட்டு சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருசக்கர வாகனங்கள் மூலம் சாராயம் கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 10 மாதங்களுக்கு மேலாக கல்வராயன் மலையில் முற்றிலும் சாராயம் இல்லாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், கள்ளச்சாராயம் கடத்தி வந்து மலை அடிவார கிராமங்களில் சாராய பாக்கெட்டுகள் விற்பனை படுஜோராக நடக்கிறது.

குறிப்பாக தும்பை, பாச்சேரி, மோட்டாம்பட்டி, ஆனைமடுவு, மூலக்காடு உள்ளிட்ட மலை அடிவார கிராமங்களில் சாராய விற்பனை செய்யப்படுகிறது.

சங்கராபுரம் பகுதி கிராமங்களில் பாக்கெட் சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு சோதனை சாவடிகளில் மீண்டும் பாதுகாப்பு பணியில் போலீசாரை நியமிக்க உயர் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement