தீவிரம் அருவாமூக்கு திட்டத்தின் கட்டுமான பணிகள்... 24 கிராமங்களில் வெள்ள பாதிப்பிற்கு தீர்வு  

கடலுார்: கடலுார் அருகே கீழ் பரவனாற்றில் கட்டப்பட்டு வரும் அருவா மூக்குத்திட்டம் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், இந்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள 58 கி.மீ., நீளமுள்ள கீழ் பரவனாறு, சேமக்கோட்டையில் தொடங்கி திருச்சோபுரத்தில் உள்ள அருவாமூக்கு என்ற இடத்தின் வழியாக சென்று கடலுார் பழைய துறைமுகம் அருகில் கடலில் கலக்கிறது.

கீழ் பரவனாற்றில் மழைக் காலங்களில் மழை நீருடன் சேர்த்து நெய்வேலி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் சுரங்க நீரும் கலந்து வெளியேறுவதால், ஆண்டுதோறும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

இதனால், புதுச்சத்திரம், திருச்சோபுரம், ஆலப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள 24 கிராமங்களில் பல ஏக்கர் விளைநிலங்கள், மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. வெள்ள பாதிப்பை தடுக்க கடலுார் அடுத்த திருச்சோபுரம் கீழ்பரவானற்றில், அருவாமூக்கு என்ற இடத்தில் தடுப்பணை கட்டி, அங்கிருந்து ஒரு புதிய கால்வாய் வெட்டி 1.60 கி.மீ., தொலைவில் உள்ள கடலில் எளிதில் வெள்ள நீரை வடிய வைக்கும் திட்டத்தை செயல்படுத்த 81.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் இருந்து இப்பணியை துவங்க கடந்த 17.06.2024 அன்று அனுமதி பெறப்பட்டது. இதுவரை கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

சாலையில் இருந்து 12 கி.மீ. துாரம் சென்று ஆறு கடலில் கலப்பதை தவிர்த்து 1.60 கி.மீ. துாரத்தில் அருகில் உள்ள கடலில் வெள்ள நீரை விரைந்து வெளியேற்றும் வகையில் புதிய கால்வாய் ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2 இடங்களில் கடல் நீர் உள்ளே புகாமல் இருக்க ஷட்டர் அமைக்கப்படுகிறது. அவற்றில் ஒரு இடத்தில் ஷட்டர் அமைக்கப்பட்டு விட்டது. இது தவிர 1.60 கி.மீ., துாரத்திற்கு புதியதாக ஒரு கால்வாய் வெட்டி கடலில் சென்று சேர்க்கப்படும்.

குறிப்பாக, 2 இடங்களில் கடல் நீர் உள்ளே புகாமல் இருக்க ஷட்டர் அமைக்கப்படுகிறது. அவற்றில் ஒரு இடத்தில் ஷட்டர் அமைக்கப்பட்டு விட்டது. இது தவிர 1.60 கி.மீ., துாரத்திற்கு புதியதாக ஒரு கால்வாய் வெட்டி கடலில் சென்று சேர்க்கப்படும். இதன் மூலம் கீழ் பரவனாற்று தண்ணீர் விரைவாக சென்று கடலில் கலக்கும்.

இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் கீழ் பரவனாற்றில் மழைக் காலங்களில் வெள்ளம் எளிதில் வடிவதோடு அதனை சுற்றியுள்ள சுமார் 15,600 ஏக்கர் விளை நிலங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்படும். அருவாமூக்கு திட்டம் இந்தாண்டு பயன்பாட்டிற்கு வரும் என, விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement