நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது

வாஷிங்டன்: நோய் கிருமி கடத்தியதாக, வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானியை அமெரிக்காவில் எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்தவர் செங்சுவான் ஹான். இவர் வுஹானில் உள்ள ஹூவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் அமெரிக்காவிற்கு நோய் கிருமி கடத்தியதாக, டெட்ராய்ட் விமான நிலையத்தில் எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து எப்.பி.ஐ., இயக்குனர் காஷ் படேல் கூறியதாவது: அமெரிக்காவிற்குள் உயிரியல் பொருட்களை கடத்தியதற்காகவும், அதிகாரிகளிடம் பொய் சொன்னதற்காகவும் சீன நாட்டவர் கைது செய்யப்பட்டார். இந்த நபர் சீன மக்கள் குடியரசின் குடிமகனும், சீனாவின் வுஹானில் முனைவர் பட்ட மாணவருமான செங்சுவான் ஹான் ஆவார்.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆய்வகத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு முகவரியிடப்பட்ட வட்டப்புழுக்கள் தொடர்பான உயிரியல் பொருள் கொண்ட நான்கு பொட்டலங்களை ஹான் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி உள்ளார்.
டெட்ராய்ட் பெருநகர விமான நிலையத்திற்கு வந்தவுடன், ஹான் கைது செய்யப்பட்டார். அவர் எப்.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையின் போது தவறை ஒப்புக்கொண்டார். நோய்க்கிருமி கடத்தல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக....!
ஏற்கனவே, பயிர்களை அழிக்கக்கூடிய நோய் கிருமியை அமெரிக்காவிற்கு கடத்தியதாக யுன்கிங் ஜியான், ஸுன்யோங் லியு ஆகிய இரண்டு சீனர்களை, அமெரிக்காவின் எப்.பி.ஐ., எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில், 'எங்களுக்கு தெரியாமல் பையில் யாரோ பூஞ்சையை வைத்திருக்கலாம்' என்றனர். இதை ஏற்காத எப்.பி.ஐ.,யினர், 'ஆபத்தான பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்தியது மிகப்பெரிய தேச பாதுகாப்பு பிரச்னை' என கூறி இருவரையும் கைது செய்து விசாரித்தனர்.
இதில் ஒருவர் விடுவிக்கப்பட்டார். மற்றொருவர் எப்.பி.ஐ., அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும்
-
கொங்கு மண்டலம் கொலைக்களத் தலைநகராகிறது: சீமான் வேதனை
-
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்; ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு!
-
விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்மநபர்கள்; சென்னையில் 3வது முறை சம்பவம்!
-
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம்!
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!