துாய்மை பணியாளர்கள் கோவையில் போராட்டம்

கோவை:கோவை மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, சம்பள பட்டியலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள முழு சம்பளத்தை வழங்க கோரி போராடி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை, பணியாளர்களை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அழைத்து பேசினார். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதையடுத்து, நேற்று காலை கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், இரண்டாம் நாளாக தர்ணா மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் இறங்கினர். இப்போராட்டம் காலவரையறை நிர்ணயிக்கப்படாமல் தொடரும் என, ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் கூறினர்.

பணியாளர்கள் கூறுகையில், 'எங்களுக்கான சம்பள பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி, நாளொன்றுக்கு, 770 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் ஒப்பந்த நிறுவனம், 540 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. கோர்ட்டின் வழிகாட்டு நெறிமுறை, தொழிலாளர் நலச்சட்டம் ஆகியவற்றின்படி, ஒப்பந்த பணியாளர்களுக்கு அரசால் பரிந்துரைக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும்' என்றனர்.

போராட்டம் காரணமாக கோவை நகரம் குப்பைகளால் நாறுகிறது.

Advertisement