குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது: 241 பேர் உயிரிழந்த சோகம்!

23

ஆமதாபாத்: ஆமதாபாத் : குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட, 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் விமானம், சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து வெடித்தது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில், ஒரேயொரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.


குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து மதியம் 1.17 மணிக்கு நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய விமானம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமானது.


இந்த விமானத்தில் பயணிகள் 242 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்களில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் உயிர் இழந்துவிட்டதாகவும், விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகைகள் சூழ்ந்துள்ளது. ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி தீ பற்றி எரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.


விரைந்தார் விமான போக்குவரத்து துறை அமைச்சர்!

ஆமதாபாத்தில் 242 பயணிகளுடன் விமானம் விபத்துக்குள்ளான பகுதிக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு விரைந்தார்.


விமான நிலையம் மூடல்!

242 பயணிகளுடன் விமானம் விபத்துக்குள்ளான ஆமதாபாத் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக விமான நிலையம் நிர்வாகம் அறிவித்துள்ளது.


பிரதமர் மோடி ஆலோசனை

பயணிகள் விமான விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்


முன்னாள் முதல்வர் கதி என்ன?

விபத்தில் சிக்கிய பயணிகள் விமானத்தில் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி பயணம் செய்துள்ளார். அவரும் உயிர் இழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை இன்னும் குஜராத் அரசு உறுதி செய்யவில்லை.



டிஜிசிஏ விளக்கம்

ஆமதாபாத்தில் விபத்துக்கு உள்ளான விமானத்தை இயக்கியவர் சுமீத் சபர்வால் அனுபவம் வாய்ந்தவர் என டிஜிசிஏ தெரிவித்து உள்ளது.


இந்தியர்கள் 169 பேர் பயணம்

ஆமதாபாத்தில் 242 பயணிகளுடன் விபத்துள்ளான விமானத்தில் இந்தியர்கள் 169 பேர், பிரிட்டனை சேர்ந்தவர்கள் 53 பேர், கனடாவை சேர்ந்த ஒருவர், போர்ச்சுக்கல்லை சேர்ந்த 7 பேர் இருந்துள்ளனர். இரு விமானிகள், 10 பணியாளர்களும் விமானத்தில் பயணித்துள்ளனர்.


இங்கிலாந்து அரசு வருத்தம்

ஆமதாபாத்தில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியது குறித்து தகவல் அறிந்தோம். இந்திய அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். விபத்தில் சிக்கிய பிரிட்டனை சேர்ந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்.


தொழிலதிபர் கவுதம் அதானி அறிக்கை

ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது குறித்து தகவல் அறிந்து நாங்கள் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தோம். நினைத்துப் பார்க்க முடியாத இழப்பைச் சந்தித்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் அனைத்து அதிகாரிகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்.


போலீஸ் அதிகாரி சொன்னது என்ன?

விமான விபத்து குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டாக்டர்கள் விடுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த சில நிமிடங்களில் போலீசாரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

241 பேர் உயிரிழப்பு





இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில், ஒரேயொரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.


ஆமதாபாத்தில் 242 பயணிகளுடன் லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் பி.ஜே மருத்துவக் கல்லூரியின் விடுதி மீது விழுந்து நொறுங்கிய விபத்து ஏற்பட்டது. கேன்டீனில் உணவுப்பொருட்கள் சிதறி கிடக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.


மனதை நொறுக்கிய பேரழிவு!

ஆமதாபாத்தில் நடந்த துயரமான விபத்து குறித்து அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். இது மனதை நொறுக்கிய பேரழிவு ஆகும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். விவரிக்க முடியாத இந்த சோகமான நேரத்தில் அவர்களுடன் தேசம் துணை நிற்கிறது என ஜனாதிபதி திரவுபதி முர்மு வேதனை தெரிவித்துள்ளார்.


பிரிட்டன் பிரதமர் அதிர்ச்சி!

பிரிட்டன் பிரஜைகளுடன் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் உறவினர்களை எண்ணி வேதனைப்படுகிறேன்.


பிரதமர் மோடி வேதனை

ஆமதாபாத் துயரச் சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது; வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை நொறுக்கிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உதவுவதைக் கண்காணித்து வருகிறேன்.


காங்கிரஸ் எம்.பி. ராகுல் இரங்கல்

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து இதயத்தை உடைக்கிறது. பயணிகள் மற்றும் பணியாளர்களின் குடும்பங்கள் உணரும் வலி மற்றும் பதட்டம் கற்பனை செய்ய முடியாதது. ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம். காங்கிரஸ் கட்சியினர் பாதிக்கப்பட்டவருக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.

Advertisement