வியாபார நோக்கத்தில் செயல்படவில்லை ஆவின் நிர்வாகம்: அமைச்சர் மனோ தங்கராஜ்

திண்டுக்கல்:''ஆவின் நிர்வாகம் வியாபார நோக்கத்தில் செயல்படவில்லை,'' என, திண்டுக்கல்லில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.

அவர் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை விரிவுப்படுத்திட வேண்டும் என கூறியுள்ளனர். இதை முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து செல்வேன். பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு கடன் வாயிலாக கறவை மாடுகள் வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும்.

தினம், 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும் நிலையில் உள்ளூர் விற்பனையை வரைமுறைக்குள் கொண்டு வந்துள்ளோம். இது அடுத்த ஆண்டில் 40 முதல் 45 லட்சமாக அதிகரிக்கும். அதற்கேற்றவாறு உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவோம்.

நிறுத்தப்பட்ட பால் பவுடர் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆவின் விற்பனை உயர்ந்துள்ளதுடன் வளர்ச்சியை நோக்கி செல்கிறது. சென்னையில் 15 லட்சம் லிட்டர் பால், மோர், தயிரை முறையாக குளிரூட்டப்பட்டு வழங்குகிறோம். அதை சிறு வியாபாரிகள் சரியான முறையில் குளிரூட்டி விற்பனை செய்யாததால் பிரச்னை ஏற்படுகிறது. இதில் ஆவினை குறைசொல்வது ஏற்கமுடியாது.

அமுல் பால் போல விற்பனை இல்லை எனக்கூற முடியாது. அவர்கள் கார்ப்பரேட் போல செயல்படுகின்றனர். ஆனால் நம் வரைமுறைகள் முற்றிலும் வேறு. எடுத்துக்காட்டாக அமுல், ஆவின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் புரியும்.

ஒரு பக்கம் விவசாயிகளுக்கு நேர்மையான விலை கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் விற்பனையில் மிக குறைந்த விலையில் பால் கொடுக்க வேண்டும். இது இரண்டையும் சமநிலையில் வைக்க வேண்டும். ஆவினுக்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய இடம் உள்ளது. அதனால் பாலின் விலையை உயர்த்த முடியாமல் பல நிறுவனங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement