பெடல் தறிகளில் விலையில்லா சேலை உற்பத்தி கூட்டுறவு சங்க நெசவாளர்கள் மகிழ்ச்சி

ஆர்.கே.பேட்டை:கூட்டுறவு சங்கம் வாயிலாக இயங்கிவரும் பெடல் தறிகளில் பள்ளி சீருடை தயாரிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது விலையில்லா சேலை நெசவு தீவிரமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால், நெசவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி தாலுகாவில் நெசவு தொழில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கைத்தறி மற்றும் விசைத்தறிகள் கடந்த 1990 களில் விறுவிறுப்பாக செயல்பட்டு வந்தன.

இந்த தறிகளில் லுங்கி, கர்சிப், பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. விசைத்தறி நெசவில் போதிய வருவாய் இல்லாததாலும், உதிரிபாங்களின் விலை உயர்வாலும் விசைத்தறிகளை கைவிட்டு, குறைந்த மின் திறனில் இயங்கும் பெடல் தறிகள் அதிகளவில் நிறுவப்பட்டு, நெசவு நெய்யப்படுகிறது.

குறைந்த மின்திறனில் இயங்கும் பெடல் தறிகளில், கைத்தறி துணி ரகங்களையும் தயாரிக்க அனுமதிக்கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக இயங்கும் பெடல் தறிகளில், பள்ளி மாணவர்களின் சீருடை, விலையில்லா வேட்டி, சேலை உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில், 72 கைத்தறி கூட்டுறவு சங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 2,150 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த பிப்., முதல் மே இறுதி வரையிலான காலகட்டத்தில், பள்ளி மாணவ- மாணவியருக்கான சீருடைகளுக்கு தேவையான துணிரகங்கள் பெடல் தறிகளில் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கான துணிகள் உற்பத்தி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நெசவு தொழிலில் உழைப்பு ஏற்ற வருவாய் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வரும் நிலையில், ஆண்டு முழுதும் தொழில் வாய்ப்பு கிடைத்தால் ஓரளவிற்கு இந்த தொழில் தலைநிமிரும். பள்ளி சீருடை, விலையில்லா வேட்டி, சேலை ரகங்களையும் தாண்டி கூடுதல் உற்பத்திக்கு அரசு வழிகாட்ட வேண்டும். ஆண்டு முழுதும் தறிகளை இயக்க நெசவாளர்கள் தயாராக உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் விலையில்லா சேலை உற்பத்தி மட்டுமே அதிகளவில் செய்யப்படுகிறது. விலையில்லா வேட்டி மற்றும் சேலை தயாரிப்பு, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement