146 கோடி! உச்சம் தொட்டது இந்திய ஜனத்தொகை; இனி சரிவு தான் என்கிறது ஐ.நா., அறிக்கை

7

புதுடில்லி: 'இந்தியாவின் மக்கள் தொகை, 146 கோடியாக அதிகரித்துள்ளது. அடுத்த 40 ஆண்டுகளில், இது 170 கோடியை தொட்டு, அதன்பின், படிப்படியாக சரியும்' என, ஐ.நா., மக்கள் தொகை அமைப்பு தெரிவித்துள்ளது.


ஐ.நா.,வின் மக்கள் தொகை அமைப்பு, 2025க்கான உலக மக்கள் தொகை நிலை அறிக்கையை நேற்று வெளியிட்டது.

அதன் விபரம்:



இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம், ஒரு பெண்ணுக்கு 1.9 பிறப்புகள் என்ற அளவில் குறைந்துள்ளது. இது முன்பு, 2.1 என்ற அளவில் இருந்தது.



சராசரியாக, இந்திய பெண்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மக்கள் தொகை அளவை பராமரிக்க, குறைவான குழந்தைகளையே பெற்றுக் கொள்கின்றனர் என்பதே இதன் அர்த்தம்.

ஆயுட்காலம்



இந்தியாவில் கருவுறுதல் விகிதம் குறைந்து வந்தாலும், இளைஞர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.



அந்நாட்டின் மக்கள் தொகையில், 24 சதவீதம் பேர், 0- - 14 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 17 சதவீதம் பேர், 10- - 19 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 26 சதவீதம் பேர், 10- - 24 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர்.


இந்தியாவின் மக்கள் தொகையில், 68 சதவீதம் பேர் அதாவது, 15 - 64 வயதுடையவர்கள் வேலை செய்யும் வயதில் உள்ளனர்.


இந்தியாவில் தற்போது, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை, மொத்த
மக்கள் தொகையில், 7 சதவீதமாக உள்ளது.


ஆயுட்காலம் அதிகரிப்பதால், இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும். 2025 கணக்கின்படி, பிறக்கும் போது ஆண்களின் ஆயுட்காலம், 71 ஆண்டுகளாகவும், பெண்களின் ஆயுட்காலம், 74 ஆண்டுகளாகவும் இருக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது.


இந்தியாவின் மக்கள் தொகை எண்ணிக்கை, 146 கோடியை தொட்டுள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடாக தொடர்ந்தாலும், மொத்த கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது.


அடுத்த, 40 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை, 170 கோடியாக உயர்ந்து, பின் குறைய துவங்கும்.


கடந்த 1960ல், இந்தியாவின் மக்கள் தொகை, 43.6 கோடியாக இருந்த போது, ஒரு பெண் சராசரியாக ஆறு குழந்தைகளை பெற்றெடுத்தார். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், கல்வி மேம்பாடு, சுகாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


மேலும், வாழ்க்கையை தீர்மானிப்பதில் பெண்கள் அதிகாரத்தையும் பெற்றுஉள்ளனர். இதனால், இந்தியாவில் ஒரு பெண் சராசரியாக இரண்டு குழந்தைகளையே தற்போது பெற்றெடுக்கிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தனித்துவமான வாய்ப்பு



இது குறித்து, ஐ.நா., மக்கள் தொகை அமைப்புக்கான, நம் நாட்டின் பிரதிநிதி ஆண்ட்ரியா எம்.வோஜ்னர் கூறியதாவது:



இந்தியாவில், 1970ல் ஒரு பெண் சராசரியாக ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்தார். தற்போது கல்வி, சுகாதார வசதிகள் மேம்பட்டுள்ளதால், ஒரு பெண் சராசரியாக இரண்டு குழந்தைகளையே பெற்றுக் கொள்கிறார். இதனால் கருவுறுதல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.


எனினும், மாநிலங்கள், ஜாதிகள் மற்றும் வருமானக் குழுக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இன்னும் ஆழமாக உள்ளன.


இனப்பெருக்க உரிமைகள் மற்றும் பொருளாதார செழிப்பு எவ்வாறு ஒன்றாக முன்னேற முடியும் என்பதைக் காட்ட, இந்தியாவுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement