மச ஒரம்பு ஓடை புனரமைப்பு நிறைவு.. 10 கோடி லிட்டர் நீர் சேகரிக்க முடியும் : விவசாயிகள் மகிழ்ச்சி!

தொண்டாமுத்தூர்: நல்லூர் வயலில், சிறுதுளி அமைப்பு சார்பில், மச ஒரம்பு நீரோடையை தூர்வாரி புனரமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இனி, 10 கோடி லிட்டர் நீர் இப்பகுதியில் சேகரிக்க முடியும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையின் ஜீவ நதியாக நொய்யல் ஆறு விளங்கி வருகிறது. நொய்யல் ஆற்றிற்கு, 34 கிளை நீரோடைகளின் மூலம் நீர் வரத்து வருகிறது. அதில் முதன்மையானதாக மத்வராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட நல்லூர் வயலில் உள்ள, மச ஒரம்பு ஓடை உள்ளது.

புதர் நிறைந்தும், நீர்வழி பாதை மறைந்தும் காணப்பட்டது. இந்நிலையில், சிறுதுளி அமைப்பு சார்பில், டைட்டன் நிறுவனத்தின் நிதி உதவியுடன், மச ஒரம்பு நீரோடையை தூர்வாரி புனரமைக்கும் பணி, கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்டது.

மொத்தம், 5.7 கி.மீ., நீளம் கொண்ட நீரோடையை தூர்வாரி, ஆழப்படுத்தி, 7 தடுப்பணைகளும், புனரமைத்து வலுப்படுத்தப்பட்டது. தூர்வாரும் பணிகள் நிறைவடைந்து. இதன் நிறைவு விழா மற்றும் புனரமைக்கப்பட்ட நீரோடை திறப்பு விழா, நேற்று நடந்தது.

இந்த நீரோடை புனரமைக்கப்பட்டதன் வாயிலாக, 10 கோடி லிட்டர் நீர் சேமிக்கப்படுவதோடு, 3,700 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பயனுள்ளதாக அமையும். அதோடு, வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், வனவிலங்குகளுக்கும் குடிநீர் கிடைக்கும்.

இவ்விழாவில், டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன், தமிழக சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கூடுதல் தலைமை செயலர் மணிவாசன், சிறுதுளி அமைப்பின் தலைவர் பாலசுப்ரமணியம், நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement