லாரி உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் பறித்த டி.எஸ்.பி., உட்பட மூவர் மீது வழக்கு பதிவு
துாத்துக்குடி: லாரி உரிமையாளரை மிரட்டி, 1 லட்சம் ரூபாய் வாங்கியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சென்னை சைபர் கிரைம் டி.எஸ்.பி., உட்பட மூவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், மணியாச்சி டி.எஸ்.பி.,யாக 2022 ஆகஸ்ட் முதல் 2024 ஆகஸ்ட் வரை பணியாற்றியவர் லோகேஸ்வரன். அவரது அலுவலகத்தில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஏட்டு பிரபாகரன், பசுவந்தனை காவல் நிலைய காவலர் சரவணன் ஆகியோர் மாற்று பணியாக வேலை பார்த்தனர்.
புளியம்பட்டியை சேர்ந்த லாரி உரிமையாளர் மகாராஜன் என்பவருக்கு சொந்தமான லாரியில் அனுமதியின்றி சரள் மண் ஏற்றிச் சென்றபோது, 2023 மார்ச் 31ல் ஏட்டு பிரபாகரன், காவலர் சரவணன் ஆகியோர் மருதன்வாழ்வு பகுதியில் லாரியை பிடித்துள்ளனர்.
அப்போது, வழக்கு பதிவு செய்யாமல் லாரியை விடுவிக்க, டி.எஸ்.பி., லோகேஸ்வரனுக்கு 1 லட்சம் ரூபாயும், தங்களுக்கு, 50,000 ரூபாயும் தர வேண்டும் என, மகாராஜனை மிரட்டியுள்ளனர்.
போலீசார் நடத்தும் மாரத்தான் போட்டிக்காகவே சரள் மண் எடுத்துச் சென்றதாக மகாராஜன் அவர்களிடம் கூறியுள்ளார். இருப்பினும், மகாராஜனிடம் இருந்து 1 லட்சம் ரூபாயை வாங்கிய பின்னரே லாரியை விடுவித்துள்ளனர். இதுகுறித்து, மறுநாள் டி.எஸ்.பி., லோகேஸ்வரனிடம் நேரில் சென்று மகாராஜன் புகார் அளித்தார்.
இருவர் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளார். இதற்கிடையே, 50,000 ரூபாயை உடனே தருமாறு மகாராஜனை மொபைல்போனில் தொடர்பு கொண்டு பிரபாகரனும், சரவணனும் மிரட்டி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட மகாராஜன் லஞ்ச ஒழிப்பு துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்நிலையில், உள்துறை செயலர் அனுமதியுடன் டி.எஸ்.பி., உட்பட மூவர் மீதும் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
லோகேஸ்வரன் தற்போது சென்னை சைபர் கிரைம் பிரிவில் டி.எஸ்.பி.,யாகவும், ஏட்டு பிரபாகரன் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திலும், காவலர் சரவணன் திருச்செந்துார் தாலுகா காவல் நிலையத்திலும் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
பி.டி.ஓ., பொறுப்பேற்பு
-
அமெரிக்காவில் சட்டசபை உறுப்பினர் சுட்டுக் கொலை; போலீஸ் வேடத்தில் மர்மநபர் வெறிச்செயல்!
-
சினிமா புகழுடன் ஹீரோ வேஷத்துடன் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்
-
ம.பி., என்கவுன்டரில் 3 பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் பலி
-
மிரட்டலில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது: போப் வலியுறுத்தல்
-
தி.மு.க., பெயர் வைத்து ஏமாற்றுவது இனிமேல் நடக்காது: சொல்கிறார் அண்ணாமலை