லாரி மீது மோதி நசுங்கிய கார் கோர்ட் ஊழியர்கள், வக்கீல் பலி மாவட்ட நீதிபதி காயத்துடன் தப்பினார்

துாத்துக்குடி: முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் வழக்கறிஞர், நீதிமன்ற பணியாளர்கள், காவலர் என நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாவட்ட நீதிபதி படுகாயமடைந்தார்.

தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணஜெயந்த் ஆனந்த். இவர், வழக்கறிஞர் தனஞ்செய ராமச்சந்திரன், 56, நீதிமன்ற ஊழியர்கள் வாசு ராமநாதன், 45, ஸ்ரீதர் குமார், 41, உதயசூரியன், 39, பாதுகாவலர் நவீன்குமார், 31 ஆகியோருடன், 'இன்னோவா' காரில் திருச்செந்துார் சென்றார்.

காரை வாசு ராமநாதன் ஓட்டினார். திருச்செந்துாரில் தரிசனம் முடிந்து, நேற்று காலை துாத்துக்குடி --- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டையபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, துாத்துக்குடியில் இருந்து அரியலுாருக்கு ஜிப்சம் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில், எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.

விபத்தில், தனஞ்செய ராமச்சந்திரன், வாசு ராமநாதன், நவீன்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்ற மூவரையும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ஸ்ரீதர் குமார் உயிரிழந்தார்.

நீதிபதி பூர்ணஜெயந்த் ஆனந்த், நீதிமன்ற ஊழியர் உதயசூரியன் ஆகியோர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நிகழ்ந்த இடத்தை மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான், விளாத்திகுளம் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஞான ஜெரீதா பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்ற போது, விபத்து நிகழ்ந்திருக்கலாம் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மோசமான சாலை காரணமா?

துாத்துக்குடி --- மதுரை தேசிய நெடுஞ்சாலை போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, இரண்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. உச்ச நீதிமன்றம் அந்த தடையை நீக்கியதால், தற்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சாலை ஆங்காங்கே படுமோசமாக இருப்பதால், கார் போன்ற இலகுரக வாகனங்கள் தடுமாற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தற்போதைய விபத்துக்கு பராமரிப்பில்லாத சாலை காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

Advertisement