பெங்களூரு சம்பவம் எதிரொலி: வெற்றி கொண்டாட்டங்களுக்கு வழிகாட்டுதல்களை வகுக்க குழு அமைத்தது பிசிசிஐ

புதுடில்லி: பெங்களூரு நிகழ்வை பாடமாக எடுத்துக் கொண்ட பி.சி.சி.ஐ., வரும் காலங்களில் அப்படி நடக்காமல் இருக்க வழிகாட்டுதல்களை வகுக்க குழு ஒன்றை அமைத்து உள்ளது.


ஐ.பி.எல்., தொடரில் முதல் முறையாக பெங்களூரு அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், கடந்த 4ம் தேதி சின்னசாமி மைதானத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை பார்க்க திரண்டவர்கள் மத்தியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற கர்நாடக ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது.


கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து இன்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


இந்த கூட்டத்தில், ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து மற்றும் பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், பெங்களூருவில் வெற்றி கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட சம்பவம் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வழிமுறைகளை வகுக்க குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தேவஜித் சைகியா தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில், பிராப்தேஜ் சிங் பாட்டியா, ராஜீவ் சுக்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவானது அடுத்த 15 நாட்களில் வழிமுறைகளை இறுதி செய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement