பெண்ணையாற்றில் வெள்ளத் தடுப்பு சுவர் கொம்மந்தான்மேட்டிற்கு விடிவுகாலம்

பாகூர் அடுத்த கொம்மந்தான்மேடு தென்பெண்ணையாற்றின் குறுக்கே, கடந்த 2011ம் ஆண்டு தரைப்பாலத்துடன் கூடிய தடுப்பணை கட்டப்பட்டது.

முறையான திட்டமிடலின்றி கட்டுமானம் அரைகுறையாக நடந்ததால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதெல்லாம், அணைக்கட்டு உடைவதும், தரை பாலத்தின் இணைப்பு சாலை மற்றும் கரைப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு அடித்து செல்வதும் வழக்கமாக உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மீண்டும் தடுப்பணையின் கரைப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, மண் அரிப்பு காரணமாக 100 மீட்டர் நீளத்திற்கு தண்ணீர் உள்ளே சென்று கரைகளை அடித்து சென்று, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில், 10 கோடியே 83 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், கொம்மந்தான்மேடு தென்பெண்ணையாற்றின் கரையோர பகுதியில் வெள்ள தடுப்பு சுவர் அமைத்து, சேதமான அணைக்கட்டை சீரமைக்கும் பணியை, கடந்த மார்ச் 16ம் தேதி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, தற்போது, கொம்மந்தான்மேடு தென்பெண்ணையாற்றில், 300 மீட்டர் நீளத்திற்கும், 5 மீட்டர் உயரத்திற்கு வெள்ள தடுப்பு சுவர் அமைத்து, சேதமான அணைக்கட்டை சீரமைக்கும் பணிக்காக, இயந்திரங்கள் மூலமாக பூமியில் துளையிடப்பட்டு அஸ்திவார பில்லர்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

Advertisement