ஆக்கிரமிப்பில் எம்.எல்.ஏ., அலுவலகம் மாஜி அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு

புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதி வெங்கட்டா நகர் மின்துறை அலுவலகம், ரெயின்போ நகர் பூங்கா அருகே உள்ள இடத்தை 20 ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணி மற்றும் மின் துறை சார்பில் அலுவலகங்கள் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்டது. ஆனால், இதுவரை எந்த அலுவலகமும் கட்டப்படாததால், அந்த இடத்தை அப்பகுதி மக்கள் குப்பைமேடாக பயன்படுத்தி, மெல்ல ஆக்கிரமித்து வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் கூறுகையில், வெங்கட்டா நகர் மின்துறை அலுவலகம் அருகே அரசு மூலம் கையகப்படுத்தப்பட்ட இடங்கள் தற்போது வரையில் எவ்வித பயன்பாடின்றி குப்பை மேடாகி உள்ளது. மேலும், பூங்கா அருகேயுள்ள எம்.எல்,ஏ., அலுவலகம், குறிப்பிட்ட இடத்தை விட கூடுதலான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும்.

பல அரசு அலுவலகங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. அதுபோன்ற அலுவலகங்களை இதுபோன்ற நகரின் மையப் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement