பிரெஞ்சியர்களுக்கு ஆலோசனை கூறிய சோழர்களின் மகாநாட்டார் சபை; அந்த நாள் ஞாபகம்... வந்ததே நெஞ்சிலே....

பிரெஞ்சு ஆட்சியின் ஆரம்ப காலங்களில் புதுச்சேரியில் மகாநாட்டார் சபை என்ற ஒரு அமைப்பு செயல்பட்டு வந்துள்ளது. அது ரொம்ப பவர்புல்லான அமைப்பாக இயங்கி வந்துள்ளதை புதுச்சேரியின் வரலாற்று பக்கங்களில் ஆங்காங்கே அழுத்தமான காட்சிகளாக காணப்படுகின்றது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அமைப்பு அக்காலத்து பிரெஞ்சு கவர்னர்களுக்கே ஆலோசனை கூறியுள்ளது. புதுச்சேரியில் எழுந்த ஒரு சிக்கலான வழக்கை தீர்க்க மகாநாட்டாரை டூப்ளே கூட்டியுள்ளார். அப்படியென்றால் அந்த அமைப்பின் முக்கியத்துவம் அக்காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

பிரெஞ்சியர்கள் இந்த அமைப்பை ஒரு முக்கிய ஆலோசனை சபையாக கருதியுள்ளனர்.

புதுச்சேரியின் முதல் கவர்னரான பிரான்சுவா மர்த்தேன் 1693ல் பிப்ரவரியில் மக்களின் கருத்து அறிய மகாநாட்டார் சபையை கூட்டியதாக தன்னுடைய 'மெமோரிஸ்' என்ற நுாலில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அந்த ஆண்டில் புதுச்சேரி பிரதேசம் மீது உரிமை கொண்டாடிய செஞ்சி அரசர், மர்த்தேனுக்கு ஒரு தாக்கீது அனுப்பினார். அதில், ஒன்று 5,000 அல்லது 6,000 வராகன் கடன் கொடுங்கள்; இல்லையென்றால் புதுச்சேரியை விலைக்கு வாங்கி கொள்ளுங்கள் என்று அந்த தாக்கீதில் குறிப்பிடப்பட்டது.

இதில்தான் மர்த்தேனுக்கு சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக மக்களின் கருத்தறிய கூட்டப்பட்டது. மர்த்தேனை பின்பற்றி கவர்னர் டூப்ளேவும் மகாநாட்டாரின் சபையை கூட்டி கருத்துகளை கேட்டறிந்துள்ளார்.

அது எல்லாம் சரி. இந்த அமைப்பு எங்கிருந்து வந்தது. யார் இதனை ஏற்படுத்தியது, பிரெஞ்சியர்கள் ஏற்படுத்தினார்களா என்று பலருக்கும் கேள்வி எழும்.

உண்மையில் இந்த அமைப்பு பிரெஞ்சியர்கள் ஏற்படுத்தவில்லை. சோழர்கள் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. கி.பி., 9ம் நுாற்றாண்டு முதல் 13ம் நுாற்றண்டு வரை தமிழகத்தை ஆண்ட சோழமன்னர்கள் நிர்வாகத்தை மைய நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம் என்று பிரித்து கையாண்டனர். மைய நிர்வாகம் நேரடியாக மன்னர்களின் கண்காணிப்பில் இருக்க, உள்ளாட்சி நிர்வாகம் அந்தந்த வட்டார மக்களின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.

இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியை ஒரு மண்டலமாகவும், ஒவ்வொரு மண்டலமும் பல வள நாடுகளாக பிரிக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு வளநாடுகளும் பல நாடுகளாகவும், நாடு பல ஊர்களாகவும் பிரித்து நிர்வகிக்கப்பட்டன. காலபோக்கில் ஊர் கிராமம் என்றும் அழைக்கப்பட்டது.

பிராமணர்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட ஊர்களை சதுர்வேதி மங்கலம் என்று அழைத்தனர். அங்கு பிராமணர்களால் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவை சபை அல்லது மகாசபை என்று அழைக்கப்பட்டது.

பிராமணர் செல்வாக்கு இல்லாத கிராமங்களை நாடு என்று அழைத்து, அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவை நாடு அல்லது மகாநாடு என்றும், அதன் உறுப்பினர்களை மகாநாட்டார் என்று அழைத்தனர்.

சோழர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்த புதுச்சேரி பிரதேசம் அடுத்து விஜயநகர மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தபோதும் மகாநாட்டார் சபை செயல்பட்டது.

அப்படியே பிரெஞ்சியர்கள் ஆட்சி கால்தடம் பதித்தபோதும் இருந்து மகாநாட்டார்கள் சபை தொடர்ந்து வந்துள்ளது. மக்களின் ஆதரவாக செயல்பட்டு வந்த மகாநாட்டார் சபை பிரெஞ்சியர்கள் மதிப்பு கொடுத்து மக்களின் கருத்துகளாக கேட்டறிந்தனர்.

சோழர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட மகாநாட்டார் சபை அந்நியரான பிரெஞ்சியர்களுக்கு, அதுவும் நமது மண்ணில் ஆலோசனை கூறியுள்ளது சிறப்பு தான்.

Advertisement