வியாபாரிகளுக்கான தேர்தல் நாளை மனு தாக்கல் துவக்கம்
சென்னை,
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக நகர விற்பனை குழு அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு குழுவிலும், சாலையோர வியாபாரிகளில் இருந்து ஆறு பேர், தேர்தல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், 35,588 வியாபாரிகள் ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர்.
இதற்கான வேட்பு மனு தாக்கல், நாளை முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு 27ம் தேதி நடைபெறும்.
இந்த தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம், ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தலைமையில் நேற்று நடந்தது. அதில் கமிஷனர் குமரகுருபரன் பேசியதாவது:
ஓட்டுப்பதிவு மையங்கள், ஓட்டு எண்ணிக்கை மையங்கள் ஆகிய இடங்களில், குடிநீர், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மேலும், 'சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம், சக்கர நாற்காலி இருத்தல் அவசியம். வாக்காளர்களுக்கு உதவ, ஒவ்வொரு மையத்திலும் உதவி மையம் ஏற்படுத்த வேண்டும்.
இதில், வாக்காளர்கள் சாலையோர வியாபாரத்திற்கான அடையாள அட்டை, ஆதார், ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு, குடும்ப அட்டை ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்க வழிவகை செய்ய வேண்டும்.
ஒரு வாக்காளர், பதிவு செய்யப்பட்ட மண்லத்தில் இருந்து, மற்றொரு மண்டலத்தில் போட்டியிட விரும்பினால், குறிப்பிட்ட மண்டலத்தில் பதிவு செய்யப்பட்ட, ஒரு சாலையோர வியாபாரி முன்மொழிபவராகவும், மற்றொருவர் வழிமொழிபவராகவும் இருந்தால் மட்டும் அவருடடைய வேட்பு மனு ஏற்கப்படும்.
ஒரு சாலையோர வியாபாரி ஏதேனும் ஒரு மண்டலத்தில், ஒரு பிரிவில் மட்டுமே போட்டியிட முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.