பா.ஜ., மாநில செயலர் உட்பட மூவர் மோசடி வழக்கில் கைது

செங்குன்றம், போரூர் அடுத்த முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் தீபன் சக்ரவர்த்தி. இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள 'பானாசோனிக்' நிறுவனத்தில், துணை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர், பாடியநல்லுாரைச் சேர்ந்த கணபதிலால் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல்ஸ் கடைக்கு, 48 லட்ச ரூபாய் மதிப்பிலான மின் சாதன பொருட்களை 'சப்ளை' செய்துள்ளார்.

அதேபோல, திருமுல்லைவாயலைச் சேர்ந்த கோகுலவாசன் என்பவரும், கணபதிலால் கடைக்கு 50 லட்ச ரூபாய்க்கு பொருட்களை 'சப்ளை' செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், கணபதிலால் பொருட்களுக்கான பணம் கொடுக்கவில்லை. இதையடுத்து, அவரிடமிருந்து பணத்தை வாங்க, பாடியநல்லுாரைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி கே.ஆர்.வெங்கடேஷ், 51, என்பவரிடம், தீபன் சக்ரவர்த்தியை கோகுலவாசன் அழைத்துச் சென்று, உதவி கேட்டுள்ளனர்.

இதற்கு கமிஷனாக, கோகுலவாசனிடம் 8 லட்ச ரூபாயும், தீபன் சக்கரவர்த்தியிடம் 12 லட்ச ரூபாயும் வெங்கடேஷ் கேட்டுள்ளார். முதலில் ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கேட்டுள்ளார். கேட்ட பணத்தை தீபன் சக்ரவர்த்தி கொடுத்துள்ளார்.

வெகுநாட்களாகியும் பணத்தை வாங்கித்தராத நிலையில், தீபன் சக்ரவர்த்தி அட்வான்ஸ் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதற்கு கோகுலவாசன், வெங்கடேஷ் மற்றும் கணபதிலால் சேர்ந்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தாம் ஏமாற்றப்படுவதை உணர்ந்த தீபன் சக்ரவர்த்தி, செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

செங்குன்றம் போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, வெங்கடேஷ், 51, கணபதிலால், 45, கோகுலவாசன், 42, ஆகிய மூவரையும், நேற்று முன்தினம் கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதில் வெங்கடேஷ் மீது, ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்குகள், ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பண மோசடி, துப்பாக்கி வைத்து மிரட்டியது, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

Advertisement