ரூ.29.90 லட்சம் மோசடி மேலும் ஒருவர் கைது

சென்னை, சென்னையைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன்; மென்பொருள் நிறுவன ஊழியர். கடந்தாண்டு, நவ., 17ம் தேதி இவரது மொபைல் போன் எண்ணிற்கு, மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார்.

கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்தவர், 'உங்கள் ஆதார் எண்களை பயன்படுத்தி, பார்சலில் போதை பொருள் கடத்தப்பட்டு உள்ளது. சற்று நேரத்தில் மும்பை போலீசார், உங்களை தொடர்பு கொள்வர்' எனக்கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து, மீண்டும் ஒருவர் தொடர்பு கொண்டு, தன்னை மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி எனக் கூறியுள்ளார். உங்களை 'ஆன்லைன்' வாயிலாக 'டிஜிட்டல்' கைது செய்துள்ளோம்.

நீங்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்க, நாங்கள் தெரிவிக்கும் வங்கி கணக்கிற்கு, 29.90 லட்சம் ரூபாய் அனுப்ப வேண்டும். அந்த பண பரிமாற்றத்தை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சரிபார்த்த பின், மீண்டும் அந்த பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி விடுவோம் என, மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, கடந்த மாதம் புதுச்சேரியைச் சேர்ந்த தம்பதியை கைது செய்தனர். தொடர் விசாரணையில், புதுச்சேரியைச் சேர்ந்த ரமேஷ்குமார், 39, என்பவர் தம்பதியுடன் சேர்ந்து, பண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, திருநெல்வேலியில் பதுங்கி இருந்த ரமேஷ்குமாரை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்துள்ளனர். இவரிடம் இருந்து, 79,500 ரூபாய், ஏழு சிம் கார்டுகள், ஐந்து மொபைல்போன்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement