பழையசீவரம் பாலாற்று பாலத்தில் மண் குவியல் அகற்றம்

வாலாஜாபாத்:பழையசீவரம் - திருமுக்கூடல் பாலாற்று பாலத்தின் மீது இருபுறமும் குவிந்திருந்த மண் குவியல், நெடுஞ்சாலைத் துறை சார்பில் அகற்றப்பட்டது.
வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில், பழையசீவரம் உள்ளது. பழையசீவரம் - திருமுக்கூடல் பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன், திருமுக்கூடல் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் கல் குவாரி மற்றும் கிரஷர்கள் துவக்கப்பட்டது.
இத்தொழிற்சாலைகளில் இருந்து ஏராளமான கனரக வாகனங்கள் இரவு, பகலாக இயங்குகின்றன.
போக்குவரத்து அதிகம் உள்ள இந்த பாலத்தின் இரு புறங்களிலும், மண் குவிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.
இதனால், பாலத்தின் மீதுள்ள மண் தேக்கத்தை அகற்ற வாகன ஓட்டிகள் கோரி வந்தனர்.
இதனிடையே, சில தினங்களாக மழை பெய்ததால் பாலம் மீது குவிந்த மண் சகதியாகி வாகன ஓட்டிகள் அதிகம் சிரமபட்டனர்.
இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இந்த பாலத்தின் இருபுறமும் குவிந்த மண், பொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.