மனைவி காட்டு யானை தாக்கி இறந்ததாக நாடகம் கணவரிடம் போலீசார் விசாரணை

மூணாறு:கேரளா பீர்மேடு அருகே வனத்தினுள் இறந்த பெண், காட்டு யானை தாக்கி இறக்கவில்லை என பிரேத பரிசோதனையில் உறுதியானதால் அது குறித்து கணவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் தோட்டப்புரா பகுதியைச் சேர்ந்தவர் பினு 54. வனத்துறையில் தற்காலிக காவலராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி சீதாவுடன் 50, நேற்று முன்தினம் வன விளை பொருட்களை சேகரிப்பதற்கு வனத்தினுள் சென்றார். குடியிருப்பு பகுதியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் மீன்முட்டி பகுதியில் மனைவியை காட்டு யானை தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற முயன்றபோது தனக்கும் காயம் ஏற்பட்டதாகவும் அலைபேசியில் உறவினர்களுக்கு தெரிவித்தார்.

பீர்மேடு ஊராட்சி தலைவர் தினேசன் தலைமையில் சிலர் இருவரையும் மீட்டு அங்குள்ள தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சீதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பினுவுக்கு எவ்வித காயங்களும் இல்லை என தெரியவந்ததால் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சீதாவின் உடல் பிரேத பரிசோதனையில் காட்டு யானை தாக்கியதற்கான அடையாளங்கள் தென்படவில்லை. மாறாக பலமாக தாக்கப்பட்ட காயங்கள், மோதல் நடந்ததற்காக அடையாளங்கள் இருந்தது.

சம்பவ இடத்தில் காட்டு யானை நடமாடியதற்கான அறிகுறி இல்லை என கோட்டயம் வனத்துறை அதிகாரி ராஜேஷ், தெரிவித்தார். அதனால் பீர்மேடு போலீசாருக்கு பினு மீது சந்தேகம் எழுந்ததால் மனைவி இறந்தது எப்படி என அவரிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement