படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே மீன் பிடிக்கச் சென்ற போது படகு கவிழ்ந்ததில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்பண்ணை பகுதியைச் சேர்ந்த பாலமுருகனுக்கு சொந்தமான பைபர் படகில் கார்த்திகேயன் 48, சமய ஸ்ரீதரன் 20, சக்தி குமார் 25, பிரதாப் 22, ஆகியோர் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதிகாலை 5:30 மணிக்கு 14 நாட்டிகல் மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்த போது காற்றின் சுழற்சியால் படகு கவிழ்ந்தது.

இதில் அதில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் படகில் இருந்த மீனவர்கள் இந்த நான்கு மீனவர்களையும் மீட்டனர்.

தேவிபட்டினம் மரைன் போலீஸ் எஸ்.ஐ., கதிரவன் தலைமையிலான போலீசார் விபத்து பகுதிக்கு சென்று மீனவர்களையும், படகையும் மற்ற மீனவர்கள் உதவியுடன் கரைக்கு கொண்டுவந்தனர்.

Advertisement