அரிவாளை காட்டி போலீசை மிரட்டிய திருடன் தப்பி ஓட்டம்

7

திருச்சி: திருச்சி, திருவெறும்பூர் அருகே வாழவந்தான் கோட்டையை சேர்ந்த மதியழகன் மனைவி கலா, 35; திருச்சி மன்னார்புரம் பகுதி மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்க்கிறார்.

நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து, துவாக்குடிக்கு பஸ்சில் வந்த அவர், அங்கிருந்து சைக்கிளில் வாழவந்தான் கோட்டைக்கு சென்றார். அவரை பைக்கில் பின் தொடர்ந்த வந்த இரண்டு பேர், கலாவை கீழே தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த நான்கரை சவரன் தங்க செயினை பறித்து தப்பினர்.

செயின் பறித்த இருவரும், பைக்கில் திருச்சி நோக்கி சென்றனர். அப்போது, காட்டூர் ஆயில் மில் பகுதியில் உள்ள செக்போஸ்டில் அரியமங்கலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள், பைக்கில் வந்த இருவரையும் நிறுத்தி விசாரித்தனர்.

இருவரும் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், இருவர் மீதும் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் இருவரையும் மேற்கொண்டும் துருவினர்.

ஒரு கட்டத்தில், இருவரில் ஒரு வாலிபர், போலீசாரிடம் எப்படியும் சிக்கி விடுவோம்; அதனால் அவர்களிடம் இருந்து எப்படியாவது தப்பி விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

சட்டென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, போலீசாரை வெட்டி விடுவதாக மிரட்டினார். அரிவாளை கண்டு மிரண்ட போலீசார், பயத்தில் சற்று பின் வாங்க, தான் வந்த வாகனத்தையும், உடன் வந்த நபரையும் அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றார்.

போலீசார் அங்கிருந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், கரூர் மாவட்டம், வெங்கமேடை சேர்ந்த மோகன் பாபு, 24, என்பதும், அரிவாளை காட்டி மிரட்டியது அதே பகுதியை சேர்ந்த சங்கர், 25, என்பதும் தெரியவந்தது. மோகன்பாபுவை கைது செய்த போலீசார், சங்கரை தேடி வருகின்றனர்.

Advertisement