ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தை தவிர்த்தது இந்தியா

5

புதுடில்லி: எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் 'ஆப்பரேஷன் ரைசிங் லயன்' தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

இந்த அறிக்கை மீது உறுப்பு நாடுகளான சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் உள்ளிட்டவை தங்கள் கருத்துகளை பதிவு செய்தன.

இந்த தாக்குதல், அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படுவதாகவும், சர்வதேச சட்டத்தை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தின.

ஆனால், இந்த அமைப்பில் உறுப்பு நாடாக உள்ள இந்தியா, இந்த அறிக்கை மீது எந்த கருத்தும் குறிப்பிடாமல் தவிர்த்தது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

இந்த விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

எனவே, போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளுக்கு இடையே பேச்சு நடத்த வழிவகை ஏற்படுத்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இதுபற்றி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இஸ்ரேல் மற்றும் ஈரான் பிரதிநிதிகளுடன் விவாதித்தார்.

இருநாடுகள் இடையேயான மோதல் போக்கு பற்றி கவலையை வெளிப்படுத்தியதுடன், இதுபோன்ற பதற்றமான நடவடிக்கைகள் மேற்கொள்வதை தவிர்க்கும்படியும், பேச்சு நடத்தி சுமுகத்தீர்வு காணவும் அப்போது அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் இந்நிலைப்பாடு பற்றி, மற்ற உறுப்பு நாடுகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் விவாதங்களில் இந்தியா பங்கேற்கவில்லை.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement