கூட்டணி கட்சியினரை உள்ளடக்கி 'பூத்' கமிட்டி அமைக்கும் பா.ஜ.,

2

சென்னை : தமிழகம் முழுதும், 68,000 ஓட்டுச்சாவடிகளிலும், அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அடங்கிய குழுவை ஏற்படுத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:



உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்தில் மதுரை வந்தபோது, மாநில நிர்வாகிகளிடம், 'அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் 'பூத்' கமிட்டி முதல் ஓட்டுச்சாவடி வரை இணைந்து பணியாற்ற வேண்டும்' என, அறிவுரை வழங்கி உள்ளார். தமிழகம் முழுதும் உள்ள, 68,000 ஓட்டுச்சாவடிகளிலும் அ.தி.மு.க.,வுக்கு பூத் கமிட்டிகள் உள்ளன.


தமிழக பா.ஜ.,விலும், 50,000க்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகள் உள்ளன. அ.ம.மு.க.,வுக்கும் பல மாவட்டங்களில் பூத் கமிட்டிகள் உள்ளன.

எனவே, ஒவ்வொரு பூத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளில், ஒவ்வொரு கட்சிக்கும் தலா இருவர் என, மொத்தம், 10 - 15 பேரை ஒருங்கிணைத்து, குழு அமைக்க வேண்டும். இக்குழு வாயிலாக மக்களிடம், தி.மு.க., ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து விளக்க வேண்டும்.


அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தியது குறித்தும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.



ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் உள்ள, மொத்த ஓட்டுகளில், 50 சதவீத ஓட்டுகளை பெறும் வகையில், இக்குழு செயல்பட வேண்டும் என, கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. விரைவில், குழு அமைக்கும் பணி துவக்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement