'ஸ்டாலின் - அழகிரி சந்திப்பை பின்பற்றி பன்னீர், தினகரனை இணைக்க வேண்டும்' பழனிசாமிக்கு பா.ஜ., 'அட்வைஸ்'

7


மதுரையில் அழகிரியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அதை பின்பற்றி, அ.தி.மு.க., பலத்தை அதிகரிக்க, பன்னீர்செல்வம், தினகரனை கூட்டணியில் இணைக்குமாறு அ.தி.மு.க., தலைமைக்கு, பா.ஜ., மேலிடம் ஆலோசனை வழங்கி உள்ளது.

தென்மாவட்டங்கள்



இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:



கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு தென்மாவட்டங்களில், எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டுகள் கிடைக்கவில்லை. இதனால்தான், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.

தென்மாவட்டங்களில், முக்குலத்தோர் ஓட்டுகள் கணிசமாக உள்ளன. பன்னீர்செல்வம், தினகரன், சசிகலாவை, அ.தி.மு.க.,வில் மீண்டும் சேர்க்காவிட்டால், வரும் சட்டபை தேர்தலிலும், முக்குலத்தோர் ஓட்டுகள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வருவதில் பாதிப்பு ஏற்படும்.

இதைத் தடுக்க, முக்குலத்தோர் இனத்தவரான, நெல்லையை சேர்ந்த நயினார் நாகேந்திரனை, தமிழக பா.ஜ., தலைவராக, கட்சி மேலிடம் நியமித்தது.

இதுபோலவே, தினகரன், பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்கப்பட்டால், தென்மாவட்டங்களில் தி.மு.க.,வுக்கு முக்குலத்தோர் ஓட்டுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என, தி.மு.க., மேலிடம் கருதுகிறது.


இந்த பாதிப்பை சரி செய்யவே, மதுரையில் தி.மு.க., பொதுக்குழுவை, முதல்வர் ஸ்டாலின் நடத்தினார். மேலும், மதுரையில் வசிக்கும் தன் சகோதரர் அழகிரி வீட்டுக்கும் சென்று நலம் விசாரித்தார்.

60 சதவீதம்



தி.மு.க.,வின் தென் மண்டல செயலராக இருந்த அழகிரி, ஸ்டாலின் உடன் ஏற்பட்ட மோதலால், கடந்த 2014ல் தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, அவரை ஸ்டாலின் சந்தித்ததால், அழகிரி ஆதரவாளர்கள் மீண்டும் தி.மு.க.,வில் சேர்க்கப்பட உள்ளனர்.


தி.மு.க., இதுபோன்று, எங்கெல்லாம் பின்னடைவு ஏற்படுகிறதோ, அதை சரிசெய்யும் நடவடிக்கையை, எடுத்து வருகிறது.



ஆனால், தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவாக இருப்பது, பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.,வில் இல்லாதது தான். அவர்களை சேர்த்தால், முக்குலத்தோர் ஓட்டுகளில், 60 சதவீதத்துக்கு மேல் அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கும்.



எனவே, தி.மு.க.,வை பின்பற்றி, பன்னீர்செல்வம், தினகரன், சசிகலாவை, அ.தி.மு.க.,வில் சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை, தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர்களையும் ஏற்று, கூட்டணி தலைவராக பழனிசாமி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என, பா.ஜ., ஆலோசனை வழங்கி உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.



- நமது நிருபர் -

Advertisement