புதர்மண்டிய ஓடைகள், விஷப்பூச்சிகள் நடமாட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் அச்சம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் நகர் பகுதியில் செல்லும் நீர்வரத்து ஓடைகளில் கழிவுகள் கொட்டப்பட்டும், செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுவதால் விஷப்பூச்சிகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நகரின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் இருந்து பெரியகுளம், வடமலைக்குறிச்சி, செங்குளம் உட்பட பல்வேறு கண்மாய்களுக்கு நீர் வரத்து பாதைகள் உள்ளன. இதில் மொட்டபெத்தான் கண்மாயிலிருந்து பெருமாள்பட்டி, ராமகிருஷ்ணாபுரம் வழியாக வடமலைகுறிச்சி கண்மாய்க்கு வரும் வகையில் ஒரு நீர்வரத்து ஓடை உள்ளது. இந்த ஓடையின் தென் பகுதியில் ராமகிருஷ்ணபுரம் மூன்றாவது தெருவில் பல குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில் இந்த ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதேபோல் பெரியகுளம் கண்மாயிலிருந்து நகரின் மையப்பகுதி வழியாக செல்லும் நீர்வரத்து ஓடையில் ஒட்டுமொத்த பஜார் கழிவுகள் கொட்டப்பட்டு பாலத்தின் கண்கள் அடைபட்டு சுகாதாரக்கேடு காணப்படுகிறது.

கிளைச் சிறையில் இருந்து செங்குளம் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் விஷ பூச்சிகள் அதிகளவில் குடியிருப்பு பகுதியில் வந்து செல்கிறது. இதே நிலைதான் ஊரணிப்பட்டி மடத்துப்பட்டி தெருக்களிலும் காணப்படுகிறது. எனவே அனைத்து நீர்வரத்து ஓடைகளையும் முழு அளவில் துார்வாரி சுத்தம் செய்து கழிவுகள் தேங்காத நிலையை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அப்புறப்படுத்த வேண்டும்



கோவிந்தராஜ், விவசாயி: வடமலைக்குறிச்சி கண்மாய் நீர்வரத்து பாதை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. இதை முழு அளவில் அப்புறப்படுத்தி சரி செய்தால் மட்டுமே மழை நேரத்தில் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து ஏற்படும்.

விஷ பூச்சிகள் நடமாட்டம்



சமுத்திரம், சுய தொழில் முனைவோர்: செங்குளம் கண்மாயை ஒட்டி பல்வேறு வீடுகள் உள்ளது. இந்த கண்மாயில் கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேடு காணப்படுகிறது. விஷ பூச்சிகள் நடமாட்டம் அச்சப்பட வைக்கிறது. குடிநீர் குழாய்கள் பாதிக்கப்படுகிறது.

தடுப்பு சுவர் வேண்டும்



மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி: நகராட்சி அலுவலகத்தின் பின்புறத்தில் இருந்து கிருஷ்ணன் கோயில் தெருவிற்கு செல்லும் வழியில் உள்ள நீர்வரத்து ஓடையில் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதாரக் கேடு காணப்படுகிறது. செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இரவு நேரங்களில் பாம்புகள் ரோட்டை கடந்து செல்கிறது. எனவே, இந்த நீர்வரத்து பாதையை முழு அளவில் சுத்தம் செய்து தடுப்பு சுவர் வேண்டும்.

Advertisement