பகிங்ஹாம் கால்வாயில் பாலம் கட்ட அனுமதி கோரி கடலோர ஒழுங்குமுறை குழுமத்திடம் விண்ணப்பம் இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., இணைப்புக்கு திட்டம்

சென்னை:சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலையை இணைக்கும் வகையில், பகிங்ஹாம் கால்வாயின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க, கடலோர ஒழுங்குமுறை குழும அனுமதி கோரி, நெடுஞ்சாலை துறை விண்ணப்பித்துள்ளது.

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய பகுதிகளில், சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி வெகுவாக அதிகரித்துள்ளது.

இதனால், இத்தடத்தில் செல்லும் வாகனங்களின் வசதிக்காக, இந்த இரண்டு சாலைகளையும், அடுத்தடுத்து விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.

இதில் பழைய மாமல்லபுரம் சாலையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்ல இணைப்பு வழி போதிய அளவுக்கு இல்லை. சோழிங்கநல்லுார், பெரும்பாக்கம் அருகில் உள்ள வழி மட்டுமே, தற்போது பயன்பாட்டில் உள்ளது.

இங்கு பல்வேறு இடங்களில் பகிங்ஹாம் கால்வாய் மீது பாலம் அமைத்து, இணைப்பு வழி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை, நீலாங்கரை வரை நீட்டித்து, கிழக்கு கடற்கரை சாலையில் இணைக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக, துரைப்பாக்கத்தில் பகிங்ஹாம் கால்வாயின் குறுக்கே. 1.4 கி.மீ., தொலைவுக்கு உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டம், 204 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டது.

முதற்கட்டமாக பழைய மாமல்லபுரம் சாலையில் இருந்து பகிங்ஹாம் கால்வாய் வரை சாலை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக, கால்வாயின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பது, இ.சி.ஆர்., இணைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால், இத்திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், பகிங்ஹாம் கால்வாயின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு, கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை விதிகளில் அனுமதி பெற வேண்டும். இதற்காக, கடலோர ஒழுங்குமுறை மண்டல குழுமத்திடம் நெடுஞ்சாலைத் துறை விண்ணப்பித்துள்ளது.

தொழில்நுட்ப ஆய்வுகள் முடிந்து, அடுத்த சில மாதங்களில் இதற்கான அனுமதி பெறப்படும் என, தெரிகிறது. இந்த திட்டம் முழுமையாக நிறைவேறினால் ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து 30 நிமிடங்களில் கிழக்கு கடற்கரை சாலைக்கு மக்கள் எளிதாக செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement